எடப்பாடி பழனிசாமி குறித்து, அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பான 2வது நாள் விசாரணையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், பி.வைரமுத்து ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான 2வது நாள் விசாரணை இன்று நடைபெற்றது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்ற விசாரணையில் , ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார் வாதாடினார். அப்போது அதிமுகவின் அவைத்தலைவர் பதவிக்கான பொறுப்புகள் குறித்து நீதிபதிகள் கேள்விய்ழுப்பியபோது, பொதுக்குழு, செயற்குழு உள்ளிட்ட கூட்டங்களை கூட்டுவதற்கான அதிகாரம் படைத்தவர் அவைத்தலைவர் என்று பதிலளித்தனர்.

மேலும், குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பழனிசாமி செயல்படுவதாகவும், திருத்தப்பட்ட விதிகளுக்கும், அதற்கு முன்னர் இருந்த விதிகளுக்குமான ஒப்பீடு ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். ஜெ. மறைவுக்கு பின் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடத்தி இருக்கலாம்; அப்படி நடத்தியிருந்தால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் தேவைப்பட்டிருக்காது என்றும், பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் பழனிசாமி கொண்டு வர முயல்வது அதிமுகவின் சட்ட விதிகளுக்கு முரணானது என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்பது 5 ஆண்டு பதவிக்காலம் கொண்டது என்றும், இந்த 5 அண்டுகளும் கட்சியின் முடிவுகளை ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்து தான் எடுக்க வேண்டும் என்பது விதி என்றும் கூறப்பட்டது. கட்சி அலுவலம், தேர்தல் முடிவு, நிர்வாகிகள் நியமனம் , பொதுக்குழு, செயற்குழு கூட்டுவது என அனைத்திலும் இருவரும் இணைந்து முடிவெடுத்தால் மட்டுமே அவை செல்லும் என்றும் வாதிடப்பட்டது. பழனிசாமி பொதுச்செயலாளர் பதவியை குறுக்குவழியில் பெற்றுள்ளதாகவும், முயற்சிப்பதாகவும் ஓபிஎஸ் தரப்பு கடும் குற்றச்சாட்டை முன்வைத்தது.
உ
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி என்பது கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவது, இந்த தேர்வு கட்சியின் அடிப்படை விதியோடு தொடர்புடையது என்றும், அதிமுகவில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஒரே பதவி பொதுச்செயலாளர் பதவி தான் என்றும் தெரிவிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமியின் வசதிக்காக கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஜெயலலிதா அதிமுகவின் தாய் போன்றவர் என்றும், அவர் இடத்திற்கு யாரும் வரக்கூடாது என்பது கட்சியின் நிலைப்பாடு என்றும் விளக்கமளிக்கப்பட்டது. ஆனால் அதையும் மீறி எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் கட்சி பதவிக்கு வர நினைக்கிறார் என்றும் பன்னீர்செல்வம் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.