போலி ஆவணங்கள் மூலம் அரசு நிலங்களை அபகரிக்க முயலும் நபர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யுமாறு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் நில நிர்வாக ஆணையர், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் பொது நிலங்களை அபகரிப்பதற்காக போலியான அரசு ஆவணங்களை உருவாக்கும் அனைத்து நபர்களுக்கு எதிராகவும் குற்றவியல் வழக்குகளை பதிவுசெய்ய வேண்டும் என உத்தரவிட்டு உள்ளார். சட்ட விரோத ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து அரசாங்க நிலங்களை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
இதேபோல், அரசு சொத்துக்களை அடையாளம் கண்டு, அந்த நிலங்களில் வசிப்பவர்களிடம் ஆவணங்களின் உண்மைத் தன்மையை சரிபார்க்க வேண்டும் எனவும், இதில் அந்த ஆவணம் போலியானது அல்லது சட்டவிரோதமானது என தெரியவரும் பட்சத்தில், நிலத்தை மீட்பதற்கான பணிகளை தொடங்கவும், குற்றவியல் வழக்குத்தொடரவும் அனைத்து நடவடிக்கைகளையும் தொடங்கப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.