“இந்தியா என்பதும் பாரத் என்பதும் ஒன்றுதான்” – ப.சிதம்பரம்
பாரத நாடு பழம்பெரும் நாடு என சுப்பிரமணிய பாரதியார் பாடியுள்ளார். பாரதம் என்பது நமக்கு விரோதம் அல்ல என காங்கிரஸ் எம்பி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் ஓராண்டு நிறைவு விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சத்யமூர்த்தி சிலையிலிருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்துகொண்டு சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடைபயணம் சென்றார்.

பேரணி முடிவில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம், “அரசியல் சாசனத்தில் இந்தியாவும் இருக்கிறது பாரத்தும் இருக்கிறது. நாம் இந்தியாவையும் பயன்படுத்துகிறோம் பாரத்தையும் பயன்படுத்துகின்றோம். திடீரென்று இந்தியா மீது என்ன கோபம்? எதிர்க்கட்சி கூட்டணி INDIA இந்தியா என்ற அதன் பெயரை சுருக்கி எழுதுவதால் இந்தியா மீது கோபம் வந்துவிட்டது. நாளைக்கு Bharath பாரத் என்று எதிர்க்கட்சி கூட்டணி சுருக்கி வைத்தால் பாரத்தையும் மோடி மாற்றி விடுவாரா? இது சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கை. இந்தியா என்பது ஒன்றுதான் பாரத் என்பது ஒன்றுதான். பாரத நாடு பழம்பெரும் நாடு என்று சுப்பிரமணிய பாரதியார் பாடியுள்ளார். பாரதம் என்பது நமக்கு விரோதம் அல்ல. ஆனால் இந்தியா மீது இவ்வளவு கோபம்? இவ்வளவு கால்புணர்ச்சி, இவ்வளவு வெறுப்பு திடீரென்று வந்ததுதான் வியப்பாக இருக்கிறது ” என்று தெரிவித்தார்.