கல்லூரி மாணவிகளுக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை
ராசிபுரம் அருகே திருவள்ளுவர் அரசு கல்லூரி முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆண்டுகளூர் கேட் பகுதியில் செயல்படும் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 3000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தக் கல்லூரியில் இயற்பியல் துறையில் பேராசிரியராக பணிபுரியும் சுந்தரமூர்த்தி என்பவர் முதலாம் ஆண்டு மாணவிகள் நான்கு பேருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ராசிபுரம் மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 27ம் தேதி பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் எஸ்எப்ஐ (SFI) சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

இதில் இரண்டு மாணவிகள் தொடர் மிரட்டலின் காரணமாக வழக்கை வாபஸ் பெற்ற நிலையில், பாதிக்கப்பட்ட ஒரு மாணவி புகாரை வாபஸ் பெறவில்லை. இச்சம்பவம் குறித்து ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையில் விசாரணை மேற்கொண்டு போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புகாரின்பேரில் போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், பேராசிரியர் தலைமறைவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார். இதையடுத்து தலைமறைவான பேராசிரியர் சுந்தரமூர்த்தியை போலீசார் தேடிவருகின்றனர்.