வைகை அணையிலிருந்து மதுரை , திண்டுக்கல், சிவகங்கை மாவட்டத்தில் ஒரு போக பாசனத்திற்காக இன்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரமுள்ள வைகை அணை அமைந்துள்ளது. தற்போது அணை நீர்மட்டம் 62 அடியாக உள்ள நிலையில் மதுரை , திண்டுக்கல், சிவகங்கை மாவட்டத்தில் ஒரு போக பாசனத்துக்கு இன்று முதல் தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதன்படி இன்று காலை வணிக வரித்துறை அமைச்சர் முர்த்தி பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தார்.
முதற்கட்டமாக அணையில் இருந்து மதுரை , திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட ஒரு போக பாசனத்துக்காக வினாடிக்கு 1,130 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 3 மாவட்டங்களில் உள்ள சுமார் 1 லட்சத்து 5 ஆயிரத்து 2 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த தண்ணீர் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் என 120 நாட்களுக்கு 8,461 மில்லியன் கனஅடி நீர் திறக்கப்படும்.
தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட ஆட்சியர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், எம்எல்ஏ மகாராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.