சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக தனி தீர்மானம். தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவியின் செயல்பாடுகள் தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டுவந்து பேசினார்.
ஆளுநர் மதச்சார்பின்மைக்கு எதிராக பேசுகிறார் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்துகிறார் பேரவையை அவ மதிக்கிறார் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் அரசியல் கட்சியின் கண்ணோட்டத்தில் ஆளுநர் செயல்படுவதால் அவருக்கு எதிராக இரண்டாவது முறையாக தீர்மானம் முன்மொழிய வேண்டிய சூழல் ஏற்றப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
தொடர்ந்து, அமைச்சரவை எடுத்த கொள்கை முடிவுகளை பொதுவெளியில் ஆளுநர் விமர்சிப்பதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
இதை உணர வேண்டியவர்கள் உணர வேண்டும் அதை உணர்த்தும் நாளாக இது இருக்கும் என்றும் தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாடு மக்களுக்கும் நண்பராக இருக்க ஆர். என் ரவி தயாராக இல்லை என்றும் கூறினார்.
மேலும், ஆளுநர் என்பவர் மாநில அரசின் நிர்வாகத்தில் குறிக்கீடாதவராக இருக்க வேண்டும் என அம்பேத்கர் குறிப்பிட்டு இருக்கிறார். ஆளுநர் அரசியல் சட்டத்திற்கு மட்டுமே விசுவாசம் ஆக இருக்க வேண்டும், அரசியல் கட்சிக்கு அல்ல என உச்சநீதிமன்றம் கூறியுள்ளதையும் குறிப்பிட்டார்.
மேலும், நாள்தோறும் கூட்டங்கள் நடத்தி ராஜ் பவனை அரசியல் பவனாக மாற்றிக் கொண்டிருக்கிறார் ஆளுநர் ரவி. வகுப்புவாத எண்ணம் கொண்ட சிலர் அது ஊத்துக்குழாக ஆளுநர் செயல்படுகிறார் என்றும் தெரிவித்தார்.
மேலும் ஆளுநர் கருத்துக்கு பதிலுக்கு பதில் சொல்லி சட்டமன்றத்தை அரசியல் மன்றமாக மாற்ற விரும்பவில்லை, ஆனால் சட்ட மன்றத்திற்கு அரசியல் நோக்கத்தோடு இடைஞ்சல் தர ஆளுநர் நினைத்தால் அதை வேடிக்கை பார்க்க மாட்டோம் என கூறினார்.
ஆளுநரின் செயல்பாடுகளை தான் விமர்சிக்கிறோம் ஆளுநரை விமர்சிக்கவில்லை என்றார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்.