கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமன் (32) மீது போலிசார் போக்சோ வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் பகுதியை சேர்ந்த சிவராமன், நாம் தமிழர் கட்சியின் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக உள்ளார். இவர் கிருஷ்ணகிரி பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு, பயிற்றுனராகவும் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் சிவராமன் கடந்த சில வாரங்களுக்கு முன் கந்திகுப்பத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான மாணவியின் பெற்றோர் சிவராமன் மீது கந்திக்குப்பம் போலீசில் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சிவராமன் மீது போக்சோ பிரிவில் வழக்குபதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர். இந்த நிலையில் பாலியல் புகாரில் சிக்கிய சிவராமனை கட்சியிலிருந்து நீக்கி நாம் தமிழர் கட்சி தலைமை அறிவித்துள்ளது.