கடந்த 2013-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றும், ‘வெயிட்டேஜ்’ (Weightage) மதிப்பெண் முறை காரணமாகப் பணி வாய்ப்பை இழந்த 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து மனு அளிப்பதற்காக இன்று சென்னை தலைமைச் செயலகம் முன்பு உள்ள பூங்காவில் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 2013-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்த போதிலும், அப்போது நடைமுறையில் இருந்த வெயிட்டேஜ் முறையினால் 410 நபர்களுக்குப் பணி நியமனம் வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தங்களுக்குப் பணி வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட இந்த 410 ஆசிரியர்களுக்கும் பணி நியமனம் வழங்கலாம் என உத்தரவிட்டது. எனினும், இந்த உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் இரு தரப்பும் (அரசு மற்றும் ஆசிரியர்கள்) பேச்சுவார்த்தை நடத்தி ஒரு சுமுகமான தீர்வை எட்ட வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது.

உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, அரசுத் தரப்பில் உயர்மட்ட அதிகாரிகள் யாரும் வராமல், வழக்கறிஞர் மட்டுமே வந்து பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள், இந்த விவகாரத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நேரடியாகத் தலையிட்டுத் தங்களுக்குப் பணி நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து, முதலமைச்சரை நேரில் சந்தித்துக் கோரிக்கை மனுவை அளிப்பதற்காகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இன்று காலை தலைமைச் செயலகம் எதிரே உள்ள பூங்காவில் குவியத் தொடங்கினர்.
ஒரே நேரத்தில் ஏராளமான ஆசிரியர்கள் தலைமைச் செயலகப் பகுதியில் திரண்டதால் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாக அங்கு விரைந்து வந்தனர். பூங்காவில் திரண்டிருந்த ஆசிரியர்களுடன் காவல்துறையினர் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசு விதிகளின்படி கோரிக்கைகளை உரிய அதிகாரிகளிடம் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீஸார் உறுதியளித்ததைத் தொடர்ந்து, ஆசிரியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் தலைமைச் செயலகப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
மாடு,ஆடு பலி உச்ச நீதிமன்ற இடைக்கால தடை: தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி முக்கிய கோரிக்கை!
