சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கிலிருந்து அவரது கணவர் ஹேம்நாத்தை விடுதலை செய்து திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனியார் விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் குறித்து நசரத்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவா் ஹேம்நாத்தை கைது செய்தனா். இந்த வழக்கின் விசாரணை திருவள்ளூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.


இந்த வழக்கில் ஜாமின் வழங்கக் கோரி ஹேம்நாத் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ஹேம்நாத் கைதாகி 60 நாட்கள் கடந்தும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மேலும் சித்ரா தற்கொலை வழக்கை 6 மாதங்களில் முடிக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.
கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் 56 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு, காவல்துறை தரப்பில் சித்ராவின் கணவர் தற்கொலைக்கு தூண்டியதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், இறுதிக்கட்ட விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, காவல்துறை தரப்பில் போதிய ஆதாரங்கள் மூலம் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, வழக்கில் இருந்து ஹேம்நாத்தை விடுதலை செய்து நீதிபதி உத்தவிட்டார்.


