’ஜனநாயகன்’ திரைப்படம் பார்த்துவிட்டுக் கண் கலங்கியது தொடர்பாக எழும் விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ள மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ், “எல்லோருக்குள்ளும் ஒரு ரசிகன் இருப்பான்; இனிமேல் அவர் திரையில் வரமாட்டார் என்ற உணர்ச்சிப் பெருக்கில்தான் என்னை அறியாமல் கண்ணீர் வந்தது” என உருக்கமாகக் கூறியுள்ளார்.
முதலமைச்சர் விஜய்யின் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைப் பார்த்த அமைச்சர் விக்னேஷ், திரையரங்கை விட்டு வெளியேறும்போது உணர்ச்சிவசப்பட்டுக் கண் கலங்கினார். இக்காட்சி சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பலர் இதைக் கடுமையாக விமர்சித்திருந்தனர்.

”அரசியலைத் தாண்டிய உணர்வுப்பூர்வமான விஷயம்”
அரிசி விலை உயர்வு, காவிரி நீர்ப் பிரச்சனை போன்ற மக்கள் பிரச்சனைகள் இருக்கும்போது, அமைச்சர் படம் பார்த்து அழுது நாடகமாடுகிறார் என்ற பிரேமலதா விஜயகாந்தின் குற்றச்சாட்டு குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் விக்னேஷ் பதிலளித்ததாவது, ”இது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் உணர்வு சார்ந்த ஒரு விஷயம். 30 ஆண்டுகளுக்கும் மேலாக, சிறு வயதிலிருந்தே முதலமைச்சர் விஜய்யின் படங்களைப் பார்த்து வளர்ந்த தலைமுறையைச் சேர்ந்தவன் நான். இன்று உண்மையிலேயே நான் அமைச்சர்தான்; நான் அமைச்சராகப் பொறுப்பேற்று இரண்டு மாதங்கள் ஆகின்றன. ஆனால், அதைத் தாண்டி எல்லோருக்குள்ளும் ஒரு குழந்தைத்தன்மையும், ஒரு ரசிகனும் இருப்பான் அல்லவா? அப்படி நான் பார்த்து ரசித்தது என் தலைவரைத்தான்.”

”தளபதி என்றும் நமக்குத் தளபதிதான்”
மேலும், தனது உணர்ச்சிக் கொந்தளிப்பிற்கான காரணத்தை விவரித்த அமைச்சர் விக்னேஷ், ஆண்டுக்கு ஒருமுறையாவது திரையில் பார்த்து ரசித்த ஒரு முகம் இனிமேல் திரையில் வரமாட்டார் என்று நினைக்கும் போது எழுந்த இயல்பான உணர்ச்சிதான் அது என்றும், திரையரங்கில் படம் பார்த்தபோது ஏற்பட்ட அந்த உணர்வை யார் வீடியோ எடுத்தார்கள் என்றே எனக்குத் தெரியாது என்பதால் அது திட்டமிட்டுச் செய்த நாடகம் அல்ல மாறாகத் தன்னை அறியாமல் இயல்பாக வந்த கண்ணீர் என்றும் விளக்கமளித்தார்.
தொடர்ந்து, திரையில் பார்த்துப் பழகிய ஒரு முகம் இனி நடிக்கப்போவதில்லை என்ற ஆதங்கத்தில் எழுந்த இந்த இயல்பான நிகழ்வைப் பெரிய அளவிலான அரசியல் விவாதப் பொருளாக்குவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்றும், இதைப் பற்றி மேலும் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறி அவர் அவ்விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
சீமை கருவேல மரங்களை அகற்றக் கோரும் அமைப்புகளுக்கு 24 மணி நேரத்திற்குள் அனுமதி!
