பெங்களூரில் நிலவிய மோசமான வானிலை காரணமாக சென்னைக்கு திருப்பி விடப்பட்ட ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் விமானி பணிநேரம் முடிந்து ஓய்வுக்கு சென்றுவிட்டதால் பயணிகள் தவிப்புக்கு உள்ளாகினர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் இன்று காலை மோசமான வானிலை நிலவியது. இதனால் டெல்லி, மும்பை, மற்றும் அபுதாபி ஆகிய இடங்களில் இருந்து பெங்களுருவுக்கு வந்த 4 விமானங்கள், அங்கு தரையிறங்க முடியாமல் சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டன. பெங்களூரில் காலை 9 மணிக்கு மேல் வானிலை சீரடைந்து விட்டதாக தகவல் கிடைத்ததால், டெல்லி ஸ்பைஸ் ஜெட் விமானம், மும்பை ஆகாஷா விமானம், மும்பை ஏர்இந்தியா விமானம் ஆகிய 3 விமானங்கள் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றன.
இதனிடையே, அபுதாபியில் இருந்து சென்னையில் வந்து தரை இறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் விமானி, தனக்கு பணி நேரம் முடிந்துவிட்டதாக கூறி, ஓய்வுக்கு சென்றுவிட்டார். இதை அடுத்து பெங்களூரில் வானிலை சீரடைந்த பின்பும் அந்த விமானம், பெங்களூருக்கு திரும்பி செல்ல முடியவில்லை. இதனால் அந்த விமானத்தில் இருந்த 168 பயணிகள், பல மணி நேரமாக தவித்துக் கொண்டிருந்தனர். மேலும், விமான நிறுவனத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள், உயர் அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி பெற்று, இந்த 168 பயணிகளையும் விமானத்திலிருந்து இறக்கி, சென்னை நகரில் உள்ள ஹோட்டல்களில் தங்க வைத்தனர். இந்தப் பயணிகள் பெங்களூர் செல்லும் வேறு விமானங்களில், அல்லது விமானி ஓய்வு முடித்துவிட்டு, மாலையில் வந்த பின்பு, அதே விமானத்திலோ பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.