ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில், பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில், ஈரோடு புறநகர் மாவட்டச் செயலாளர் ஏ.கே. செல்வராஜ் கலந்துகொண்டு தமிழக அரசு மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆவேரமாகப் உரையாற்றியுள்ளார். இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“அதிமுகவால் உயர்ந்தவர் செங்கோட்டையன்!” – கடுமையான விமர்சனம்
பொதுக்கூட்டத்தில் பேசிய ஏ.கே. செல்வராஜ், அமைச்சர் செங்கோட்டையனை நோக்கிப் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அப்போது அவர் கூறியதாவது, “பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்த உங்களை (செங்கோட்டையன்) எம்எல்ஏ ஆக்கி, வளர்த்து ஆளாக்கியது இந்தத் தொகுதி அதிமுக இயக்கம். உங்களுக்கு என்று ஒரு முகவரியைக் கொடுத்ததே இந்த இயக்கம்தான். தற்போது உங்கள் சொத்து மதிப்பு என்ன? நாவடக்கத்தோடு பேச வேண்டும். வழக்கு போட்டுவிடுவார்கள் என்ற பயத்தினால்தான் அதிமுகவில் வளர்ந்தவர்கள் தற்போது தவெகவிற்குச் சென்றுவிட்டனர்.”

மேலும், கடந்த காலங்களைச் சுட்டிக்காட்டிய அவர், “கோபி மக்களவைத் தேர்தலில் சத்தியபாமா வெற்றி பெறக்கூடாது என்பதற்காகச் செங்கோட்டையன் பல இடையூறுகளைச் செய்தார். அதையும் மீறி நான் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றேன். அப்போது இது குறித்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் சத்தியபாமா புகார் அளித்தார். விசாரணையின்போது செங்கோட்டையன் கண்கலங்கி நின்றார். அப்போது நாங்கள் தான் அவரைப் பாதுகாத்தோம்” என்று பகிரங்கமாகத் தெரிவித்தார்.
“2027 வரை கூட இந்த ஆட்சி இருக்காது” – ஏ.கே. செல்வராஜ் கணிப்பு
தற்போதைய அரசியல் நிலவரம் குறித்துப் பேசிய ஏ.கே. செல்வராஜ், தவெக அரசு மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்தார். அவர் மேலும் கூறுகையில், “அமைச்சர் செங்கோட்டையன் தற்போது தான் அங்கம் வகிக்கும் கட்சியின் 100 நாள் சாதனைப் பொதுக்கூட்டத்தில் அதிமுகவைக் கொச்சைப்படுத்தியுள்ளார். மதிமுக போல அதிமுக ஆகிவிடும் எனப் பேசியுள்ளார். இதைத் கண்டித்துச் சுவரொட்டி ஒட்ட முயன்றபோது, போலீஸ் வழக்கு போடும் என மிரட்டியதால், இன்று இதே இடத்தில் பொதுக்கூட்டம் போட்டுள்ளோம்.”
தொடர்ந்து பேசிய அவர், “இந்தத் தவெக ஆட்சி 2027 வரை கூட இருக்காது. இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் இந்த அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும். என்ன நடக்கிறது என்பதை நீங்களே பாருங்கள். ஆதரவளித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒருவிதமாகப் பேசுகின்றனர்; இடதுசாரி கட்சியைச் சேர்ந்த சண்முகம் ‘நான் நிரந்தரமாக ஆதரவு அளிக்க முடியாது’ என்று கூறுகிறார். இது நிலையான ஆட்சி அல்ல, ஒரு மைனாரிட்டி சர்கார். விரைவில் இந்த ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும்” எனத் தெரிவித்து உரையை நிறைவு செய்தார்.
கூட்டத்தில் திரண்ட முக்கியப் பிரமுகர்கள்
சத்தியமங்கலத்தில் நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில், முன்னாள் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர், அந்தியூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரமணிதரன் மற்றும் முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி அதிமுக நகர, ஒன்றிய நிர்வாகிகள் எனப் பலர் திரளாகக் கலந்துகொண்டனர். மேலும், ஆளுங்கட்சிக்கு எதிராக அதிமுக மாவட்டச் செயலாளர் விடுத்துள்ள இந்த அதிரடி எச்சரிக்கையும், நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த பேச்சும் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
