திமுக எம்.எல்.ஏ புகழேந்தி மறைவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி இரங்கல் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் நேற்று (ஏப்ரல் 05) நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பங்கேற்ற விக்கிரவாண்டி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி, திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்துள்ளார். பின்னர், ரத்த வாந்தியும் எடுத்துள்ளார். இதையடுத்து, விழுப்புரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த எம்.எல்.ஏ. புகழேந்திக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று (ஏப்ரல் 06) காலை 10.30 மணிக்கு காலமானார்.

இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினரும் , திராவிட முன்னேற்றக் கழகத்தின் விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளருமான திரு. நா. புகழேந்தி அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. உடல் நலிவுற்றிருந்தபோதும் தேர்தல் பணிகளில் கண்ணும் கருத்துமாகப் பணியாற்றி வந்த அவரது மறைவு திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு நேர்ந்த பேரிழப்பாகும். அவரை இழந்துவாடும் அவரின் குடும்பத்தினர் மற்றும் திமுக கட்சித் தோழர்கள் அனைவருக்கும் விசிக சார்பில் எமது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.