தமிழக அரசியல் களம் தற்போது உச்சக்கட்ட பரபரப்பிலும் அனல் பறக்கும் சூழலிலும் இயங்கி வருகிறது. முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் அதிரடி கைது நடவடிக்கைகளும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது விவகாரமும் மாநிலத்தின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளன. இச்சம்பவம் தொடர்பாகப் பிரபல பத்திரிகையாளர் ஐயநாதன் எழுப்பும் கேள்விகள்!
அதிர்ச்சியை ஏற்படுத்திய அதிரடி கைது!
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட விவகாரத்தை ஒரு அரசியல் நகைச்சுவையாகவே பார்க்க முடிகிறது என்று குறிப்பிட்ட பத்திரிகையாளர் ஐயநாதன், அரசியல் பாரம்பரியத்தில் வந்தவர்களுக்கு இது போன்ற கைது நடவடிக்கைகளும் வழக்குகளும் புதியவையல்ல என்றார். ஒரு குற்றச் செயல் அல்லது தெளிவான உள்நோக்கத்துடன் அத்தகைய பேச்சுக்கள் வெளிப்பட்டால் மட்டுமே அது குற்றமாகக் கருதப்பட வேண்டும். மாறாக, ஆளுங்கட்சியின் அரசியல் லாபத்திற்காகக் காவல்துறை அதிகாரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா என்ற கோள்வி பொதுமக்கள் மத்தியில் வலுவாக எழுந்துள்ளது.

விமர்சனங்களை எதிர்கொள்ள அஞ்சும் ஆளுங்கட்சி?
அரசியலில் ஆரோக்கியமான விமர்சனங்களை எதிர்கொள்வது என்பது தவிர்க்க முடியாதது. இதற்கு முன்பு திமுக ஆட்சியில் தலைவர்கள் தீவிரமான விமர்சனங்களைச் சந்திக்கும் போதும் கூட பெருந்தன்மையையும் பொறுமையையும் கடைப்பிடித்தனர். ஆனால், தற்போதைய புதிய அரசியல் சூழலில், எதிர்க்கட்சியினரைச் சிறுமைப்படுத்தும் நோக்கில் அவர்களை முடக்கும் போக்கு ஆளுங்கட்சியின் தரப்பில் தொடர்வதாக விமர்சிக்கப்படுகிறது. அரசியல் களத்தில் விமர்சனங்களைச் சகித்துக்கொள்ளும் பக்குவமும், முதிர்ச்சியும் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு அவசிய தேவையாக உள்ளது.
வரலாறு உணர்த்தும் எச்சரிக்கை மணி!
அரசியல் என்பது எப்போதுமே ‘பந்து போல’ எதிரொலிக்கும் தன்மை கொண்டது—அடித்தால் திரும்பி வரும். கடந்த கால வரலாற்றை உற்று நோக்கினால், இதுபோன்ற அதிரடி கைது நடவடிக்கைகளும் அடக்குமுறைகளும் பிற்காலத்தில் ஆட்சியாளர்களுக்கு எத்தகைய கடுமையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தின என்பதை உணர முடியும். இன்று அதிகார பலத்தைக் கொண்டு எடுக்கப்படும் ஒவ்வொரு அதிரடியான கைது நடவடிக்கையும், நாளை தமக்கு எதிராகவே திரும்பும் என்ற எச்சரிக்கையையும் அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

உளவியல் அச்சமும் நீதிமன்றத்தின் தீர்ப்பும்!
இது போன்ற அவசரக் கைதுகள் மூலம் அரசியல் எதிரிகள் மத்தியிலும் மக்களிடையேயும் ஒருவித உளவியல் அச்சத்தை (Fear Psychosis) உருவாக்க முயல்வது ஆளுங்கட்சியின் உண்மையான பலவீனத்தையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. விமர்சனங்களை ஜனநாயக முறையில் எதிர்கொள்ள அஞ்சும் நிலையே இது போன்ற அதிரடிகளுக்குக் காரணம். பொதுவெளியில் பேசப்பட்ட கருத்துக்களில் எந்தளவுக்கு உள்நோக்கம் இருந்தது என்பதை இறுதியில் நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும். இதுபோன்ற வழக்குகளில் சட்டத்தின் முன் உண்மைகள் வெளிவந்து, விரைவில் விடுதலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் வலுத்துள்ளன.
அதிகாரத்தின் உச்சத்தில் இருந்து கொண்டு எதிர்ப்புகளை ஒடுக்குவதை விட, மக்களின் குரல்களையும் ஜனநாயக ரீதியான விமர்சனங்களையும் முதிர்ச்சியோடு கையாள்வதே ஒரு உண்மையான வெற்றிகரமான ஆட்சிக்குரிய இலக்கணம் என்பதே அரசியல் பார்வையாளர்களின் தீர்க்கமான கருத்தாக உள்ளது.
