நாசாவின் சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூடத்தில் வளர்க்கப்பட்ட சோளச் செடிகளின் வேர்களும் தண்டுகளும் திசை தெரியாமல் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து விநோதமாக வளர்ந்துள்ளது அறிவியல் உலகினரிடையே பெரும் ஆச்சரியத்தையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது. புவியீர்ப்பு விசை அற்ற விண்வெளிச் சூழலில் தாவரங்கள் எவ்வாறு வளர்கின்றன என்பதை ஆராய்வதற்காக இந்த அதிரடிச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
விண்வெளியில் விநோத வளர்ச்சி
விண்வெளியில் நிலவும் புவியீர்ப்பு விசை அற்ற அல்லது மிகப் பலவீனமான சூழலில் தாவரங்களின் வளர்ச்சி எவ்வாறு அமைகிறது என்பதை அறிவதற்காக, நாசாவின் விண்வெளி ஆய்வுக்கூடத்திற்குச் சோள விதைகள் கொண்டு செல்லப்பட்டுப் பரிசோதனைக்காக நடவு செய்யப்பட்டன. சில நாட்களிலேயே அந்த விதைகள் சுற்றுப்பாதையில் முளைத்துச் செடிகளாக வளரத் தொடங்கின.

ஆனால், வழக்கமாக பூமியில் வளரும் சோளச் செடிகளைப் போல அல்லாமல், விண்வெளியில் புவியீர்ப்பு விசை இல்லாத காரணத்தினால் செடிகளின் வளர்ச்சி முற்றிலும் மாறுபட்ட வடிவத்தைக் கொண்டிருந்தது. அதாவது, சோளச் செடிகளின் தண்டுகளும் வேர்களும் நேராக வளராமல், தங்களுக்குரிய திசையைத் தொலைத்துவிட்டு வளைந்து, நெளிந்து முற்றிலும் கோணலான மற்றும் குழப்பமான தோற்றத்தில் முளைத்திருந்தது ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.
ஆரோக்கியத்தில் குறவில்லை – திசையில் மட்டுமே சிக்கல்
செடிகள் திசைமாறி விநோதமாக வளர்ந்திருந்தாலும், ஆய்வில் ஒரு ஆச்சரியமான உண்மை வெளிப்பட்டுள்ளது. இந்தச் செடிகளின் எடை மற்றும் திசுக்களின் ஆரோக்கியம் உள்ளிட்ட அத்தனை அம்சங்களும் பூமியில் வளரும் சாதாரண சோளச் செடிகளைப் போலவே துல்லியமாக இருந்தன. அதாவது, விண்வெளியின் விசித்திரமான சூழல் செடியின் உள் வளர்ச்சியிலோ அல்லது ஊட்டச்சத்திலோ எந்தவித எதிர்மறையான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. தண்டு மற்றும் வேர் வளரும் திசையில் மட்டுமே குழப்பம் ஏற்பட்டுள்ளதை நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், எதிர்கால விண்வெளி விவசாயத்திற்கு இந்த ஆய்வு மிகப்பெரிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
