Homeசெய்திகள்உலகம்100 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட புதிய காட்டுப்பூனை இனம்! வீட்டு பூனையை விட சிறியது –...

100 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட புதிய காட்டுப்பூனை இனம்! வீட்டு பூனையை விட சிறியது – விஞ்ஞானிகள் ஆச்சரியம்

-

- Advertisement -

தென் அமெரிக்க நாடான பொலிவியாவின் யுங்காஸ் மேகமூட்டக் காடுகளில், 100 ஆண்டுகளுக்கும் மேலாக கண்டறியப்படாத புதிய காட்டுப்பூனை இனம் ஒன்றை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். லியோபார்டஸ் டில்காயோ (Leopardus tilcayo) என பெயரிடப்பட்டுள்ள இந்த சிறிய காட்டுப்பூனை, வீட்டு பூனையை விடவும் சிறியதாக உள்ளது.

we-r-hiring

100 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய பூனை இனம்

புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள டில்காயோ, தென் அமெரிக்காவில் காணப்படும் டைகர் கேட் எனப்படும் சிறிய காட்டுப்பூனைகளின் குழுவைச் சேர்ந்தது. கடந்த 1923-ம் ஆண்டு பாம்பாஸ் பூனை அடையாளம் காணப்பட்டதற்குப் பிறகு, 100 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளியில் அறிவியல் ரீதியாக புதிய உயிருள்ள பூனை இனம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

வீட்டு பூனையை விட சிறியது

லியோபார்டஸ் டில்காயோ சுமார் 46 செ.மீ. நீளமும், சுமார் 1.4 கிலோ எடையும் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிர் பழுப்பு நிற உடலில் சிறுத்தையைப் போன்ற கரும்புள்ளிகள் காணப்படுகின்றன. வட்டமான காதுகள் மற்றும் நீண்ட மீசைகள் இதன் குறிப்பிடத்தக்க தோற்ற அம்சங்களாக உள்ளன.

இந்த பூனை இரவு நேரங்களில் அதிகம் செயல்படக்கூடியதாகவும், சிறிய கொறித்துண்ணிகளை உணவாக உட்கொள்வதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மரபணு ஆய்வில் தெரியவந்த ரகசியம்

இந்த விலங்கு பல ஆண்டுகளாக மனிதர்களின் பார்வைக்கு அருகிலேயே இருந்தபோதிலும், ஏற்கனவே அறியப்பட்ட டைகர் கேட் இனங்களில் ஒன்றைச் சேர்ந்ததாகவே கருதப்பட்டது. பின்னர் ஒரு வனவிலங்கு சரணாலயத்தில் இருந்த பூனையை ஆய்வு செய்தபோது, அதன் தோற்றத்தில் வேறுபாடுகள் இருப்பதை ஆய்வாளர்கள் கவனித்தனர்.

இதையடுத்து தென் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட 38 பூனைகளின் மரபணு மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வில் டில்காயோ மற்ற டைகர் கேட் இனங்களிலிருந்து மரபணு ரீதியாக வேறுபட்ட தனி இனமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.

14 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே தனிப் பரிணாமப் பாதை

மரபணு ஆய்வின்படி, லியோபார்டஸ் டில்காயோ அதன் நெருங்கிய தொடர்புடைய டைகர் கேட் இனங்களிலிருந்து சுமார் 14 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே தனித்த பரிணாமப் பாதையில் பிரிந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த ஆய்வின் மூலம் தென் அமெரிக்காவின் டைகர் கேட் குழுவில் முன்பு கருதப்பட்டதைவிட அதிகமான தனித்த இனங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

காடுகளுக்கு உள்ள அச்சுறுத்தல்

டில்காயோ வாழும் யுங்காஸ் மேகமூட்டக் காடுகள் காடழிப்பு, விவசாய விரிவாக்கம், காட்டுத்தீ மற்றும் சுரங்க நடவடிக்கைகள் உள்ளிட்ட காரணங்களால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த புதிய இனத்தின் காட்டு வாழ்விடமும், அங்கு உள்ள அதன் எண்ணிக்கையும் குறித்து இன்னும் முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை.

இதனால், இந்த கண்டுபிடிப்பு புதிய பூனை இனத்தை அடையாளம் காண்பதுடன் மட்டுமல்லாமல், அதன் வாழ்விடத்தை பாதுகாப்பதன் அவசியத்தையும் எடுத்துக்காட்டுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கிரீன்லாந்தை கைப்பற்றும் டிரம்பின் திட்டம்.. டென்மார்க்குடன் புதிய ஒப்பந்தம்! அமெரிக்காவுக்கு என்ன அதிகாரம்?

MUST READ