Homeசெய்திகள்உலகம்விஷச்சாராயம் குடித்த 48 பேர் உயிரிழப்பு! 182 பேர் பாதிப்பு – நைஜீரியாவில் அதிர்ச்சி

விஷச்சாராயம் குடித்த 48 பேர் உயிரிழப்பு! 182 பேர் பாதிப்பு – நைஜீரியாவில் அதிர்ச்சி

-

- Advertisement -

நைஜீரியாவின் தெற்கு பகுதியில் விஷச்சாராயம் குடித்ததில் இதுவரை 48 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

மெத்தனால் கலந்த விஷச்சாராயம்

நைஜீரியாவின் ஒண்டோ மாகாணத்தில் உள்ள ஒடிக்போ மற்றும் ஐரேலே பகுதிகளில் உள்ளூர் அளவில் தயாரிக்கப்பட்ட மதுபானத்தை பலர் அருந்தியுள்ளனர். அந்த மதுபானத்தில் உயிருக்கு ஆபத்தான மெத்தனால் (Methanol) கலந்திருப்பது பின்னர் தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விஷச்சாராயத்தை அருந்திய சில மணி நேரங்களிலேயே சிலருக்கு கண் பார்வை பாதிப்பு, வயிற்று வலி, வாந்தி உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெத்தனால் விஷத்தன்மை காரணமாக சிறுநீரகம், கண்கள் மற்றும் மூளை உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படலாம் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

182 பேர் பாதிப்பு

இந்த விஷச்சாராய சம்பவத்தில் மொத்தம் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒண்டோ மாகாண சுகாதாரத்துறை ஆணையர் பன்ஜி அஜாகா தெரிவித்துள்ளார். அவர்களில் 48 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் 100 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிலர் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 பேர் கைது

இந்த சம்பவம் தொடர்பாக நைஜீரியா போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். விஷச்சாராயம் தயாரித்ததாக சந்தேகிக்கப்படும் நபர் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மெத்தனால் கலந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் மதுபானத்தை தயாரிப்பதில் தொடர்புடையவர் என போலீசார் கூறியுள்ளனர்.

உள்ளூர் மதுபானத்துக்கு தடை

சம்பவத்தின் தீவிரத்தைத் தொடர்ந்து, ஒடிக்போ பகுதியில் உள்ளூர் அளவில் தயாரிக்கப்படும் மதுபானங்கள் மற்றும் மூலிகை மதுபானங்களின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு உள்ளூர் அரசு தற்காலிக தடை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஷச்சாராயத்தின் மூலத்தைக் கண்டறிய அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நைஜீரியாவில் குறைந்த விலையில் கிடைக்கும் உள்ளூர் மதுபானங்களை கிராமப்புறங்களில் பலர் பயன்படுத்தி வரும் நிலையில், அவற்றில் நச்சுப் பொருட்கள் கலக்கப்படுவதால் அவ்வப்போது உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காசாவில் பயங்கர சோகம்! சேதமடைந்த கட்டிடம் இடிந்து 21 பேர் பலி – 8 குழந்தைகள் உயிரிழப்பு

MUST READ