Homeசெய்திகள்உலகம்ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல் மீது தாக்குதல்! ஒருவர் பலி; 3 பேர் காயம்

ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல் மீது தாக்குதல்! ஒருவர் பலி; 3 பேர் காயம்

-

- Advertisement -

ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு தொடர்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், அப்பகுதியில் வணிகக் கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 3 பேர் காயமடைந்ததாகவும் ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

we-r-hiring

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஹெங்காம் மற்றும் கெஷ்ம் தீவுகளின் கடற்கரைப் பகுதிக்கு அருகே இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக கெஷ்ம் நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், 3 பேர் காயமடைந்துள்ளனர். எனினும், வணிகக் கப்பல் மீது தாக்குதல் நடத்தியது யார் என்பது குறித்த தகவலை அதிகாரிகள் வெளியிடவில்லை.

கெஷ்ம் தீவை சுற்றி தொடர் தாக்குதல்கள்

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள மிகப்பெரிய தீவான கெஷ்மைச் சுற்றிலும் நேற்று இரவு பல்வேறு தாக்குதல்கள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அந்தப் பகுதியில் பாதுகாப்பு மற்றும் கப்பல் போக்குவரத்து தொடர்பான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ள நிலையில், இதுதொடர்பாக ஈரான் மற்றும் ஓமன் இடையே நாளை பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக கூறப்பட்டிருந்தது. இந்தப் பேச்சுவார்த்தைக்கு ஒரு நாள் முன்னதாகவே வணிகக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மோதலின் முக்கிய மையமாக ஹோர்முஸ் நீரிணை

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஆறு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் போரில், ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கா–ஈரான் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரு தரப்பினருக்கும் இடையே தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரான்–அமெரிக்கா மோதல் நீடிப்பதால் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையிலும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. ஆறு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த வாரத்தில் மட்டும் கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு 100 அமெரிக்க டாலர்களைத் தாண்டி உயர்ந்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து தொடர்ந்து பாதிக்கப்பட்டால், சர்வதேச அளவில் எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கவலை எழுந்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் சர்வதேச கப்பல் போக்குவரத்தின் நிலை மற்றும் ஈரான்–அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தைகள் அடுத்தகட்டத்தில் எவ்வாறு நகர்கின்றன என்பது சர்வதேச சந்தைகளால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

MUST READ