சிறுவனை தாக்கியதாக பதிவுசெய்யப்பட்ட வழக்கில் பாடகர் மனோவின் மகன்களுக்கு முன்ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 10 ஆம் தேதி இரவு பாடகர் மனோவின் மகன்களால் தாக்கப்பட்டதாக கூறி மதுரவாயல் ஆலப்பாக்கத்தை சேர்ந்த கிருபாகரன் மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன பேரில் மனோவின் மகன்கள் ஷாகிர், ரபிக் மற்றும் அவர்களது நண்பர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக மனோவின் மகன்களின் நண்பர்களான விக்னேஷ், தர்மா ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்து வரும் மனோவின் மகன்களை தேடி வந்தனர். இதனிடையே, சம்பவத்தன்று பாடகர் மனோவின் மகன்களை மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் சேர்ந்து உருட்டு கட்டை, கற்களை கொண்டு தாக்கும் காட்சிகள் சமீபத்தில் சமூக வலைத்தலங்களில் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த மனோவின் மகன்கள் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் 30 நாட்கள் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் இருவருக்கும் முன்ஜாமின் வழங்கி நீதிபதி தனபால் உத்தரவிட்டார்.