ஐப்பசி மாத பௌர்ணமியை ஒட்டி சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோயிலில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோயில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பெளர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் 8 நாட்கள் மட்டுமே பக்தர செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் பெளர்ணமியை முன்னிட்டு நவம்பர் 13ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கி வனத்துறை நிர்வாகம் அனுமதி வழங்கியது. மேலும், காலை 6 மணி முதல் 12 வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி எனவும், கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள நீரோடைகளில் குளிக்க கூடாது என்றும் பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் மலைப்பகுதியில் இரவில் தங்க அனுமதி கிடையாது, மழை பெய்தால் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும் எனவும் வனத்துறை சார்பில் தெரிவித்திருந்தது.
அதன்படி, கடந்த 13ஆம் தேதி முதல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் சதுரகிரி மலை மீது ஏறி சுந்தரமகாலிங்கம் சுவாமியை தரிசனம் செய்தனர். இந்த நிலையில், இன்று ஐப்பசி பெளர்ணமியை ஒட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்தனர்.