‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் ஒரு காட்சி தொடர்பாக அல்லு அர்ஜுன், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீது மீண்டும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜுன், தயாரிப்பு குழு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் தலைவரும், தெலுங்கானா எம்எல்சியுமான தென்மர் மல்லன்னா புகார் அளித்துள்ளார்.
‘புஷ்பா 2’ படத்தில் போலீஸ் அதிகாரி முன்னிலையில் நீச்சல் குளத்தில் ‘புஷ்பா’ சிறுநீர் கழிப்பது போன்ற காட்சிக்கு தென்மர் மல்லண்ணா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்த காட்சி சட்ட அமலாக்க அதிகாரிகளின் கண்ணியத்தை அவமதிப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் கூறியுள்ளார். அவர் அளித்த புகாரில், படத்தின் இயக்குநர் சுகுமார், ஹீரோ அல்லு அர்ஜூன், படத்தின் தயாரிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார். ஆட்சேபகரமான முறையில் போலீஸ் கதாபாத்திரங்களை படமாக்குவதை தடுக்க அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மறுபுறம், ‘புஷ்பா 2’ படத்தின் முதல் காட்சியில் டிசம்பர் 4 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ‘புஷ்பா 2’ தயாரிப்பாளர்கள் உதவிக்கரம் நீட்டினர். அந்தப் பெண்ணின் குடும்பத்துக்கு திங்கள்கிழமை படத்தின் தயாரிப்பாளர்கள் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கினர்.
இதில் பலத்த காயம் அடைந்த அந்த பெண்ணின் 8 வயது மகன் கோமா நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அல்லு அர்ஜூனும் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார். இறந்த அந்தப் பெண்ணின் கணவர் பாஸ்கர், அல்லு அர்ஜூன் மீது தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற தயார் என்று கூறியுள்ளார். இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அல்லு அர்ஜுனுக்கு மாநில காவல்துறை புதிய நோட்டீஸ் அனுப்பியுள்ளது.