நடிகர் துருவ் விக்ரம், மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
தமிழ் சினிமாவில் சியான் என்று கொண்டாடப்படும் விக்ரமின் மகன் துருவ், ‘ஆதித்ய வர்மா’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து விக்ரமுடன் இணைந்து ‘மகான்’ திரைப்படத்திலும் நடித்திருந்தார். அடுத்தது கடந்த அக்டோபர் 17ஆம் தேதி இவரது நடிப்பில் ‘பைசன்’ திரைப்படம் வெளியானது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் உலகம் முழுவதும் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகின்றன.
அதே சமயம் துருவ் விக்ரமின் நடிப்பும் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. மேலும் இந்த படமானது தற்போது வரை ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வணிக ரீதியாகவும் வெற்றிப்பாதையில் நகர்ந்து கொண்டிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் துருவ் விக்ரம், ‘பைசன்’ படத்தை தொடர்ந்து ‘டாடா’ படத்தின் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போகிறார் என்ற பேச்சு அடிபட்டது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் துருவ் விக்ரம், மணிரத்னம் இயக்கத்தில் புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
அதாவது இந்த படமானது காதல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தில் ருக்மினி வசந்த் கதாநாயகியாக நடிக்கப் போகிறார் எனவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்நிலையில் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


