‘தக் லைஃப்’ படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் பல வெற்றிப் படங்களை கொடுத்து ரசிகர்களின் ஃபேவரைட் இயக்குனராக வலம் வருகிறார். இவர் கடைசியாக கமல்ஹாசன், சிம்பு, திரிஷா ஆகியோரின் நடிப்பில் ‘தக் லைஃப்’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் கடந்த ஜூன் மாதம் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றதோடு நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டது. ‘இந்தியன் 2’ படத்திற்கு பிறகு ‘தக் லைஃப்’ திரைப்படம் கமல்ஹாசனுக்கு சிறந்த கம்பேக் படமாக அமையும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இப்படம் ஏமாற்றத்தை தந்தது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் மணிரத்னம், துருவ் விக்ரமை வைத்து காதல் படம் ஒன்றை இயக்கப்போவதாக பேச்சு அடிபட்டது.
ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், ‘தக் லைஃப்’ படத்திற்கு பின்னர் மணிரத்னம், விஜய் சேதுபதி நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப்போவதாகவும் இந்தப் படத்தில் ருக்மினி வசந்த் கதாநாயகியாக நடிக்கப்போவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

நடிகர் விஜய் சேதுபதி ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்கச் சிவந்த வானம்’ திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பதும் நடிகை ருக்மினி வசந்த், விஜய் சேதுபதியுடன் இணைந்து ‘ஏஸ்’ திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


