ஜனநாயகன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த தலைமை நீதிபதியின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது ஜனநாயகன் திரைப்பட தயாரிப்பு நிறுவனம்.
நடிகர் விஜய், அவரது திரை வாழ்க்கையின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்துள்ள நிலையில், அந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று (ஜன-9) அன்று திரைக்கு வர இருந்தது. ஆனால் திரைப்படத்திற்கு தணிக்கை சான்று இறுதிவரை வழங்கப்படாததால் படத்தை திட்டமிட்ட நாளில் திரையிட முடியாத சூழல் ஏற்பட்டது. திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனத்திற்கு கடந்த 6ம் தேதி தணிக்கை வாரியம் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் இந்த படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்புமாறு தணிக்கை வாரிய தலைவர் பரிந்துரைத்துள்ளதாக இமெயில் அனுப்பியுள்ளாா்.

இதனால் ஜனநாயகன் திரைப்படம் திட்டமிட்ட தேதியில் திரைக்கு வர முடியாது என அறிந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பி.டி ஆஷா அமர்வு கடந்த 7ம் தேதி வழக்கில் அனைத்து வாதங்களை கேட்டு தீர்ப்பை ஒத்தி வைத்திருந்த நிலையில், நேற்று வழக்கில் தீர்ப்பு வழங்கினார். அப்போது ஜனநாயகன் திரைப்படத்திற்கு திரைப்பட தணிக்கை வாரிய பெரும்பான்மை உறுப்பினர்கள் கருத்துக்கள் அடிப்படையில் யு/ஏ சான்றிதழ் வழங்கி உத்தரவிட்டாா்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவுக்கு எதிராக திரைப்பட தணிக்கை வாரியம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அந்த மனு நேற்று மாலை அவசர வழக்காகவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணையின் போது ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனத்திற்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியதோடு, ஜனநாயகன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. மேலும் மேல்முறையீட்டு மனு மீது நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இதனால் விஜய் நடிப்பில் கடைசி படமாக திரைக்கு வர இருந்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், திரைப்பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்சன் உச்ச நீதிமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவை எதிர்த்து மேல்முறையீட்டு செய்தது. மேலும் இந்த மனு மீதான விசாரணையை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்க வேண்டும் என வரும் திங்கட்கிழமை உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யவும் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை, கேம்பர்லி நகரத்தை இணைக்க இங்கிலாந்து மேயர் சென்னை வருகை


