தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் நிலவி வந்த புகைச்சல் தற்போது பெரும் பிளவாக வெடித்துள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் முடிவுகளைப் புறக்கணித்துவிட்டு, ஒரு பெரும் குழுவாகத் திரண்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள், தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களை நேரில் சந்தித்து அவரது ஆட்சிக்குத் தங்கள் ஆதரவை வழங்கியுள்ளனர்.
நடந்து முடிந்த 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சந்தித்த பின்னடைவைத் தொடர்ந்து, கட்சியின் தலைமை மாற்றப்பட வேண்டும் என்ற குரல்கள் வலுத்தன. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி திமுவுடன் ரகசிய உடன்பாடு வைத்திருப்பதாக அதிருப்தி கோஷ்டியினர் குற்றம் சாட்டி வந்தனர். சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் தலைமையிலான இந்த அதிருப்திக் குழு, ஈபிஎஸ்-ஸின் பிடியிலிருந்து விலகி தன்னிச்சையாகச் செயல்படத் தொடங்கியது.

இன்று மதியம், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை அதிமுகவின் 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின் போது, தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் மக்கள் நலத்திட்டங்களுக்குத் தவெக அரசு எடுக்கும் முயற்சிகளுக்குத் தாங்கள் நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்தனர்.
சந்திப்பின் முக்கிய அம்சங்கள், சி.வி. சண்முகம் தலைமையிலான எம்.எல்.ஏ.க்கள் குழு, முதலமைச்சரிடம் தங்களின் ஆதரவுக் கடிதத்தை வழங்கியது. கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை மீறி, எடப்பாடி பழனிசாமியின் உத்தரவுகளை ஏற்க மறுத்து இந்த அதிரடி முடிவை அவர்கள் எடுத்துள்ளனர். ஏற்கனவே மெஜாரிட்டி பெற்று ஆட்சியில் உள்ள தவெக அரசுக்கு, அதிமுக எம்.எல்.ஏ.க்களின் இந்த ஆதரவு கூடுதல் பலத்தைச் சேர்த்துள்ளது.
அதிமுக தலைமை அதிர்ச்சி
தங்கள் தரப்பு எம்.எல்.ஏ.க்களின் இந்தத் திடீர் நகர்வால் எடப்பாடி பழனிசாமி தரப்பு கடும் அதிர்ச்சியில் உள்ளது. “கட்சித் தலைமைக்குத் துரோகம் இழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தலைமை அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள் அதிருப்திப் பக்கம் இருப்பதால், கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய், மற்ற கட்சி உறுப்பினர்களையும் அரவணைத்துச் செல்வது அவரது அரசியல் முதிர்ச்சியைக் காட்டுவதாக அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். “மக்களுக்கான ஆட்சியை வழங்க யார் ஆதரவு கொடுத்தாலும் அதை ஏற்போம்” என்பதே முதலமைச்சர் தரப்பின் நிலைப்பாடாக உள்ளது. இந்த அரசியல் மாற்றங்கள் தமிழகத்தில் ஒரு புதிய கூட்டணி கலாச்சாரத்திற்கு வித்திடுமா அல்லது அதிமுகவில் நிரந்தரப் பிளவை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: மே 14-ல் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை!
