தமிழக அரசியல் களத்தில் ‘மாற்றம்’ என்ற ஒற்றை முழக்கத்தோடு களம் கண்டு, மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தமிழக வெற்றிக் கழகம் (தவெக), சமீப நாட்களாக மேற்கொண்டு வரும் அரசியல் நகர்வுகள் மற்றும் புதிய சேர்க்கைகள் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.

இரண்டு தினங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கியப் புள்ளிகள் தவெகவில் இணையும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் அருண் ராஜ், இணையும் நபர்கள் மீது பல குற்ற வழக்குகள் இருப்பதைக் குறிப்பிட்டதோடு, ‘இனியும் பல வழக்குகள் உள்ளவர்கள் கட்சியில் இணைவார்கள்; அப்படி இணைந்தாலும் கட்சியும் அரசும் நேர்மையான முறையில் முதல்வர் தலைமையில் செயல்படும்’ என்று பேசினார். அமைச்சரின் இந்தத் தற்காப்பு வாதம், அரசியல் விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடுமையான தார்மீகக் கேள்விகளை எழுப்பியுள்ளது.

நடுநிலையாளர்களின் கேள்விகள்
வழக்குகள் மீதான நடவடிக்கை கைவிடப்படுகிறதா?
ஊழல் குற்றச்சாட்டுகள், குட்கா விவகாரங்கள் மற்றும் மத்திய அரசின் விசாரணை முகமைகளுக்குப் பயந்து தஞ்சம் அடைந்ததாகக் கூறப்படும் நபர்களைக் கட்சியில் சேர்க்கும் போதே, அவர்கள் மீதான வழக்குகளைக் தவெக அரசு கண்டுகொள்ளப் போவதில்லை என்று முடிவெடுத்துவிட்டதா என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில், இனி தமிழக அரசு சட்டப்பூர்வமாக அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அது ‘தவெகவைச் சேர்ந்த விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை’ என்றே செய்திகளில் வரும். கட்சிக்குக் களங்கம் ஏற்படும் என்பதால், இவர்களைக் காப்பாற்றும் நிலைக்குத் தவெக தன்னைத்தானே சுருக்கிக் கொள்கிறதா என்ற விவாதம் கிளம்பியுள்ளது.
இது நேர்மையான அரசா?
மக்கள் பணத்தைக் கோடி கோடியாகக் கொள்ளையடித்தது பல ஆதாரங்களுடன் வழக்குகளைச் சந்தித்து வருபவர்கள் மீதும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் போது ஒரு மருத்துவராகக் கூட பாதிக்கப்பட்ட மக்களை எட்டிப் பார்க்காதவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது எப்படி ஒரு நேர்மையான அரசாக இருக்கமுடியும்.
நேர்மையான அரசு என்றால், கையில் இருக்கும் ஊழல் வழக்குகள் மீது பாரபட்சமற்ற நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும்.
நீதியை பாகுபடுத்துவது நியாயமா?
“திமுகவினர் என்றால் அவர்கள் ஊழல் மீது நடவடிக்கை எடுப்போம்; எங்களுடன் இணைந்த அதிமுகவினர் என்றால் நடவடிக்கை எடுக்க மாட்டோம்” என்று நீதியைப் பாகுபாடு பார்த்து தன் விருப்பத்திற்கு ஏற்ப வைத்துக்கொள்வது எந்த விதத்தில் நேர்மையான அரசாக இருக்க முடியும்? திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் ஊழல்களும் வேண்டாம் என்று தெளிவாக ஓட்டுப் போட்ட மக்கள் இதனை எப்படி ஏற்றுக் கொள்வார்கள்?
’பழைய ஊழல்’ என்ற முட்டுக்கொடுத்தல்:
தவெக கட்சியைச் சேர்ந்த சிலர், “அதெல்லாம் பழைய ஊழல்” என்று சமூக வலைத்தளங்களில் முட்டுக்கொடுத்துப் பேசி வருகின்றனர். ஆனால், பழைய ஊழல் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சட்ட ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் அந்த ஊழலுக்கு உடன்படுவதற்குச் சமம் என்பதை அவர்கள் உணர வேண்டும். திமுகவின் ஊழல் மட்டும் பழையதாக இருந்தாலும் நடவடிக்கை, அதிமுகவினர் தவெகவுக்கு வந்துவிட்டால் அது பழைய ஊழல் என்று இரட்டை நிலைப்பாடு எடுப்பது நியாயமா என்ற சாட்டையடி கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.
மக்கள் செய்த அரசியல் மாற்றம்:
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் என்பது வெறும் ரசிகர்களால் மட்டும் சாத்தியப்பட்டது அல்ல. லட்சக்கணக்கான பெண்களும், இளைஞர்களும் இணைந்து தங்களது எதிர்காலத்திற்காகச் செய்த மாற்றம் இது. இந்த மாற்றத்தின் அடிப்படை நோக்கமே, ‘திமுக, அதிமுக ஆகிய இரண்டுமே போதும்’ என்பதும், ஒரு தூய்மையான, மதச்சார்பற்ற சமூக நீதி அரசு அமைய வேண்டும் என்பதுமே ஆகும். அப்படிப்பட்ட சூழலில், மீண்டும் அதே பழைய முகங்களையும், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களையும் மாற்று என்ற பெயரில் மக்கள் முன் நிறுத்துவது, தங்களை நம்பி வாக்களித்த மக்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகம் ஆகாதா என்ற ஆதங்கம் நடுநிலையாளர்களிடையே பலமாக ஒலித்து வருகிறது.
புதிய அரசியலை நோக்கி நகரும் தவெக, இத்தகைய விமர்சனங்களுக்குத் தனது செயல்பாடுகளின் மூலம் எப்படிப் பதிலளிக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
