
தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சமாக, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் மனிதர்களைப் போலவே இரண்டு அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) ரோபோக்களுக்கு உலகிலேயே முதன்முறையாக வினோத திருமணம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவின் பாரம்பரியமிக்க ‘புஷ்கின் நூலகத்தில்’ (Pushkin Library) இந்த அடையாளப்பூர்வ திருமண விழா அரங்கேறியுள்ளது.
மணமகன் ‘ராபர்ட்’ – மணமகள் ‘மட்டில்டா’

இந்த வினோத திருமணத்தில் மணமகனாக “ராபர்ட்” (Robert) என்ற ரோபோவும், மணமகளாக “மட்டில்டா” (Matilda) என்ற ரோபோவும் ஜோடி சேர்ந்தனர். இதில் ராபர்ட் அலுவலக ஊழியர் மற்றும் வலைப்பதிவர் (Blogger) போன்ற பணிகளைச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட ரோபோ ஆகும். அதேபோல் மட்டில்டா ஒரு நடனக் கலைஞர் (Ballerina) போல நேர்த்தியாகச் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இரு ரோபோக்களும் முன்னதாக ‘செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தில்’ (SPIEF-2026) உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவையாகும்.

உறுதிமொழி எடுத்து மோதிரம் மாற்றிய ரோபோக்கள்!
பாரம்பரிய திருமணங்களைப் போலவே அனைத்து சடங்குகளுடன் இந்த விழாவும் நடைபெற்றது. செயற்கை நுண்ணறிவு மற்றும் பேச்சுத் தொகுப்பு (Speech Synthesis) அல்காரிதம்கள் மூலம், தங்களின் வாழ்நாள் முழுவதும் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பதாக இரு ரோபோக்களும் திருமண உறுதிமொழியை எடுத்துக் கொண்டன.
வளையல்கள் பரிமாற்றம்: பாரம்பரிய மோதிரங்களுக்குப் பதிலாக, இந்த ரோபோக்கள் தங்களுக்குள் ஒளி உமிழும் திருமண வளையல்களை (Wedding Bracelets) மாற்றிக்கொண்டன.
இந்த விழாவின் மற்றொரு சிறப்பம்சமாக, “டாக்மேடிக்” (Dogmatik) என்ற நாய் வடிவ ரோபோ, மணமக்களுக்கான திருமண வளையல்களை மேடைக்குக் சுமந்து வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

திருமண விழாவின் இறுதியில், இரு தரப்பு மென்பொருள்களின் பொருத்தம் (Version Compatibility) மற்றும் கணினி ஒத்திசைவு (System Synchronization) ஆகியவற்றைச் சரிபார்த்து, அவை இரண்டும் “ரோபோ தம்பதிகள்” என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.
எதற்கு இந்த திருமணம்??
இந்த ரோபோக்களை உருவாக்கிய ‘IT-Imperial’ நிறுவனத்தின் துணை சி.இ.ஓ அன்னா பாக்தாசர்யான் திருமணம் குறித்து கூறியதாவது, “ இந்த நிகழ்வு மனிதர்களுக்கும் ரோபோக்களுக்கும் இடையேயான எல்லையை சுருக்குவதற்காக அல்ல; மாறாக, எதிர்காலத்தில் மனிதர்களின் அன்றாட வேலைகளை ரோபோக்கள் எளிதாக்கி, மனிதர்கள் தங்களின் நேரத்தைக் கலை மற்றும் பண்பாட்டு மேம்பாட்டிற்குப் பயன்படுத்த முடியும் என்பதை விளக்குவதற்காகவே இந்தத் தொழில்நுட்பக் காட்சி நடத்தப்பட்டது” என்று விளக்கமளித்துள்ளார்
