சிலை கடத்தல் வழக்கில் அரசு தரப்பு முதல் சாட்சியை (PW1) மீண்டும் குறுக்கு விசாரணைக்கு அழைக்கக் கோரிய மனுவைச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. வழக்கை வேண்டுமென்றே இழுத்தடிக்கும் நோக்கில் சாட்சிகளை மீண்டும் மீண்டும் நீதிமன்றத்திற்கு அழைக்க முடியாது என்று நீதிபதி தனது உத்தரவில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கீழமை நீதிமன்றம் மறுத்ததால் உயர்நீதிமன்றத்தில் மனு
மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிலைத் திருட்டு தடுப்புப் பிரிவு (சிலை கடத்தல் தடுப்பு பிரிவு) தொடர்ந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மதுரையைச் சேர்ந்த கோபால் மற்றும் ஜெயராம் ஆகியோர், வழக்கின் அரசு தரப்பு முதல் சாட்சியை (PW1) மீண்டும் ஒருமுறை குறுக்கு விசாரணைக்கு ஆஜர்படுத்தக் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால், இவர்களது கோரிக்கையைக் கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்தும், கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து சாட்சியை மீண்டும் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்குமாறும் கோபால் மற்றும் ஜெயராம் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.
நீதிமன்ற விசாரணையும் நீதிபதியின் கண்டனமும்
இந்த மனுவை உயர்நீதிமன்ற நீதிபதி விஜயகுமார் விசாரித்தார். அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டதன் காரணமாகவே, குறிப்பிட்ட தேதியில் அரசு சாட்சியை எங்களால் குறுக்கு விசாரணை செய்ய முடியாமல் போனது” என்று வாதிட்டார். இருப்பினும், நீதிமன்றப் பதிவேடுகளை ஆய்வு செய்த நீதிபதி விஜயகுமார் மனுதாரர்களின் வாதத்தை நிராகரித்தார்.

நீதிபதி விஜயகுமார் தனது தீர்ப்பில் குறிப்பிட்டதாவது
இந்த வழக்கில் முதல் சாட்சி கடந்த 2017-ஆம் ஆண்டு முதன்மை விசாரணைக்கு ஆஜரான போதே மனுதாரர்கள் தரப்பில் குறுக்கு விசாரணை செய்யப்படவில்லை. பின்னர், அவர்களின் கோரிக்கையை ஏற்றுச் சாட்சி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதும், கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூன் 16-ஆம் தேதியன்றும் கூட அவர்கள் குறுக்கு விசாரணை நடத்தவில்லை. தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தத் தவறிய மனுதாரர்கள், அதன்பிறகு சுமார் 8 மாதங்கள் கழித்துத்தான் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இந்த இமாலயத் தாமதத்திற்கு மனுதாரர்கள் தரப்பில் எவ்விதத் தகுந்த காரணமும் கூறப்படவில்லை. ஏற்கனவே தங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளைப் பயன்படுத்தத் தவறியதை நீதிமன்றக் கோப்புகளில் மறைத்துவிட்டு, மீண்டும் சாட்சியை அழைக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது பதிவுகள் மூலம் உறுதியாகிறது.
“வழக்கை மேலும் காலதாமதம் செய்து, இழுத்தடிக்கும் நோக்கத்திலேயே மீண்டும் மீண்டும் சாட்சியை அழைக்க மனுதாரர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே, இந்த மனுவை நிராகரித்த கீழமை நீதிமன்றத்தின் உத்தரவில் எந்தத் தவறும் இல்லை.” என நீதிபதி விஜயகுமார் தெரிவித்துள்ளாா். மேலும்,மனுதாரர்களின் உள்நோக்கத்தைக் கடுமையாகச் சாடிய நீதிபதி விஜயகுமார், வழக்கை இழுத்தடிக்க முயன்ற கோபால் மற்றும் ஜெயராம் ஆகியோரின் மனுவைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இந்தத் தீர்ப்பு, நீதிமன்ற நேரத்தை வீணடித்து வழக்குகளைத் தாமதப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
