தலைமை பண்பை இழந்து விட்டாரா சீமான்? – மூத்த பத்திரிகையாளர் ராஜகம்பீரன் காரசாரம்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தொடர்ச்சியான முரண்பாடான பேச்சுக்கள், தத்துவ ரீதியிலான குழப்பங்கள் மற்றும் தனிமனித வெறுப்பு பிரச்சாரங்களால் அக்கட்சியின் முக்கியத் தலைவர்களும் நிர்வாகிகளும் தொடர்ந்து வெளியேறி வருவதாகவும், இதனால் நாம் தமிழர் கட்சி தற்போது “காலி பெருங்காய டப்பா” போல மாறி வருகிறது என்றும் மூத்த பத்திரிகையாளர் ராஜகம்பீரன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
கருத்தியல் குழப்பமும், முக்கிய நிர்வாகிகள் வெளியேற்றமும்
”தொடக்கத்தில் பெரியாரிய, தமிழ் தேசியக் கோட்பாடுகளுடன் இளைஞர்களின் நம்பிக்கையைப் பெற்று உருவான இயக்கம் நாம் தமிழர். ஆனால், சீமான் தனது முரண்பாடான நிலைப்பாடுகளால் தான் கட்டிய தேன் கூட்டில் தானே கல்லை எறிந்துவிட்டார். ஜெகதீஷ பாண்டியன், ஏகலைவன் மற்றும் தற்போது களஞ்சியம் என அக்கட்சியின் தீவிரமான, முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறி வருகின்றனர். சீமானுடன் நெருக்கமாகப் பயணித்தவர்கள் அனைவரும் அவரது செயல்பாடுகளால் விரக்தியடைந்து எதிர்ப்பாளர்களாக மாறும் நிலையே நீடிக்கிறது.”

பேச்சாளராக வெற்றி, தலைவராகத் தோல்வி
”சீமான் சிறந்த மேடைப் பேச்சாளராகத் தன்னளவில் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், ஒரு அரசியல் கட்சியின் தலைவராக அவர் முற்றிலுமாகத் தோல்வியடைந்துவிட்டார். ‘சீமானுக்கு வாய் மட்டும்தான் உண்டு, கேட்கும் காதுகள் கிடையாது’ என மறைந்த இயக்குநர் மணிவண்ணன் அன்றே சரியாகக் குறிப்பிட்டார். மாறி மாறிப் பேசுவது, காமராஜரைப் புகழ்வது, பெரியாரை இழிவுபடுத்துவது, ஆர்.எஸ்.எஸ் சிந்தனைகளுக்கு இணக்கமாக தமிழ் தேசியத்தைப் பேசுவது எனத் தன் நம்பகத்தன்மையை அவரே கெடுத்துக் கொண்டார்.”
திமுக எதிர்ப்பு வாக்குகளும், விஜய் வருகையும்
”திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளையும் வேண்டாம் என நினைக்கும் 10% வாக்குகளை நம்பியே நாம் தமிழர் கட்சி இயங்கி வந்தது. ஆனால், தற்போது த.வெ.க தலைவர் விஜய்யின் வருகையால் அந்த மாற்று அரசியல் வாக்குகள் விஜய் பக்கம் இயல்பாக நகரத் தொடங்கிவிட்டன. திராவிடத்தை ஒழிப்பேன் என்று கூறி அரசியல் செய்வது அரசியல் தற்கொலைக்குச் சமம். சீமான் தனது தத்துவ ரீதியான குழப்பங்களையும் தனிமனித முரண்பாடுகளையும் திருத்திக் கொள்ளாவிட்டால், நாம் தமிழர் கட்சி முற்றிலும் அடக்கமாகும் நிலைக்குத் தள்ளப்படும்” என்று ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.
