கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. அதனால் தலைவர்கள் இறுதி கட்டப் பிரச்சாரத்தில் தீவிரமாக உள்ளனர். இன்று மாலை 6 மணிக்கு மேல் ஓட்டுரிமை இல்லாத பிரமுகர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் தொகுதிகளை விட்டு வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. நாளை வீடு வீடாக சென்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்க மட்டுமே தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியிருக்கிறது.
கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வரும் பத்தாம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. 224 தொகுதிகளை கொண்ட சட்டமன்றத்திற்கு ஒரே கட்டமாக இந்த தேர்தல் நடைபெறுகிறது. இறுதி வேட்பாளர்கள் பட்டியல் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி அன்று நிறைவு பெற்றது. இதை அடுத்த கட்சித் தலைவர்கள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வந்தார்கள்.
இந்த தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்கிற முனைப்பில் இருக்கிறது பாஜக. ஆட்சியை மீண்டும் பெற்று விட வேண்டும் என்கிற வேட்கையில் இருக்கிறது காங்கிரஸ். அதேபோல் ஜனதாதளம் எஸ் கட்சியும் ஆட்சி அமைக்க வேண்டும் என்கிற தீவிரத்தில் இருக்கிறது. பிரதமர் மோடி, அமித்ஷா, நட்டா உள்ளிட்டோர் பாஜகவுக்காக தீவிரமாக களமிறங்கி வாக்கு சேகரித்து வரும் நிலையில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, உள்ளிட்டோர் காங்கிரஸ்காக சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். ஜனதாதளம் எஸ் கட்சிக்காக முன்னாள் பிரதமர் தேவகவுடா தீவிர பிரச்சாரத்தை செய்து வருகிறார்.
சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் மாலை ஆறு மணிக்கு மேல் ஓட்டுரிமை இருக்கும் தலைவர்கள் மட்டுமே தொகுதியில் இருக்க வேண்டும். ஓட்டுரிமை அல்லாத பிரமுகர்கள் நட்சத்திர பேச்சாளர்கள் 6 மணிக்கு மேல் தொகுதிகளை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருக்கிறது.
இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்வு பெறுவதால் மூன்று கட்சித் தலைவர்களும் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர் . நாளை வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்வு பெறுவதால் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை கவனித்து வருகிறது தேர்தல் ஆணையம் .
காங்கிரஸ் , பாஜக என்று கருத்துக் கணிப்பில் இரண்டு கட்சிகளுக்கு மாறி மாறி வருவதால் கர்நாடக சட்டமன்றத் தேர்தல் மிகவும் பரபரப்பாக இருக்கிறது.