மத்திய கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகிய தர்மேந்திர பிரதான், மாணவர் போராட்டம் தொடங்கிய முதல் நாளே தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்ததாக பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய பிரதேச அமைச்சருமான கைலாஷ் விஜய்வர்க்கியா தெரிவித்துள்ளார்.


மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் சனிக்கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கைலாஷ் விஜய்வர்க்கியா கூறியதாவது:
“மத்திய கல்வி அமைச்சராகத் தமக்கு வழங்கப்பட்ட ஒவ்வொரு பொறுப்பையும் தர்மேந்திர பிரதான் மிகுந்த நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் நிறைவேற்றினார். டெல்லியில் மாணவர் போராட்டம் தொடங்கிய முதல் நாளே அவர் தனது ராஜினாமா கடிதத்தை வழங்க முன்வந்தார்” என்றார்.
மேலும் பேசிய அவர், “வங்கதேசம் மற்றும் இலங்கையில் நடைபெற்றதைப் போல, வன்முறையைப் பரப்பி இந்தியாவை ஸ்திரத்தன்மையற்ற நாடாக மாற்றத் துடித்த வெளிநாட்டுச் சக்திகளின் சதித் திட்டங்களை தர்மேந்திர பிரதானின் இந்த ராஜினாமா முறியடித்துள்ளது. அவர் செய்த இந்தச் செயலுக்காக அவரை நான் வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்தார்.
