ஜம்மு காஷ்மீரில் அரங்கேறிய சினிமா பாணி சம்பவம் | பெண் தொடர்பு குறித்தும் காவல்துறை தீவிர விசாரணை.
முன்னாள் காதலியுடன் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக, அவருக்கு அண்மையில் திருமணமான கணவரை போதைப்பொருள் வழக்கில் சிக்க வைக்க முயன்ற 51 வயது நபரை ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

சினிமா பாணி சதி திட்டம்
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த தாரிக் அகமத் (51) என்பவருக்கும் 27 வயது பெண் ஒருவருக்கும் இடையே முன்பு காதல் இருந்துள்ளது. இந்நிலையில், அந்தப் பெண்ணுக்குக் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வேறு ஒரு நபருடன் திருமணம் நடந்துள்ளது. தனது முன்னாள் காதலியை மீண்டும் அடைவதற்காகத் திட்டமிட்ட தாரிக் அகமத், புதுமாப்பிள்ளையை ஏதாவது ஒரு வழக்கில் சிக்க வைத்துச் சிறைக்கு அனுப்பிவிட்டால், காதலியைத் தன்வசப்படுத்தலாம் எனச் சதித்திட்டம் தீட்டியுள்ளார்.
வாட்ஸ்அப் மெசேஜ் & கொக்கைன் பார்சல்
தனது திட்டத்தின்படி, அந்தப் பெண்ணின் கணவரை வாட்ஸ்அப் மூலமாகத் தொடர்புகொண்ட தாரிக் அகமத், அவருக்குக் கோழித் தீவனம் அனுப்புவதாகக் கூறியுள்ளார். ஆனால், அந்தப் பார்சலுக்குள் விலையுயர்ந்த ‘கொக்கைன்’ போதைப்பொருளை மறைத்து வைத்து அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து, போதைப்பொருள் குறித்துக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் புதுமாப்பிள்ளையிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
போலீஸ் விசாரணையில் அம்பலமான உண்மை
புதுமாப்பிள்ளையிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், அவருக்கு இந்த போதைப்பொருள் விவகாரத்தில் எந்தத் தொடர்பும் இல்லை என்பதும், அந்த பார்சல் வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்ட தாரிக் அகமத் என்பவரால் அனுப்பப்பட்டது என்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, தாரிக் அகமதைப் பிடித்துக் காவல்துறையினர் பாணியில் விசாரித்தபோது, புதுமாப்பிள்ளையை போதைப்பொருள் வழக்கில் சிறைக்கு அனுப்பிவிட்டு, அவரது 27 வயது மனைவியுடன் (முன்னாள் காதலி) மீண்டும் இணையவே இந்தச் சதியைச் செய்ததாகக் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
பெண்ணுக்கும் தொடர்பா?
இதையடுத்து தாரிக் அகமதைக் கைது செய்த காவல்துறையினர், இந்தச் சதித் திட்டத்தில் அந்த 27 வயதுப் பெண்ணுக்கும் தொடர்பு உள்ளதா அல்லது கணவரைச் சிறைக்கு அனுப்பத் திட்டமிட்டது தாரிக் அகமத் மட்டுமேதானா என்பது குறித்துப் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
