தமிழக ஆட்சியாளர்களின் நிர்வாகத் திறமையின்மையையும், அவர்கள் கையாளும் தவறான ‘நேரடிவ்’ (Narrative) அரசியலையும் திமுகவின் செய்தித் தொடர்பு இணை செயலாளர் வழக்கறிஞர் சரவணன் அதிரடியாகத் தோலுரித்துக் காட்டியுள்ளார். “ரீல்ஸ்” வீடியோக்களிலும், விளம்பரங்களிலும் காட்டும் அக்கறையை, மக்கள் நலன் மற்றும் சட்டம்-ஒழுங்கில் காட்டத் தவறிவிட்டதாக அவர் கடும் ஆவேசத்துடன் விமர்சித்துள்ளார்.
100 நாள் சாதனை: வெறும் மாயையா?
‘வெற்றி தமிழ்நாடு’ என்ற பெயரில் 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடு என அரசு மார்தட்டிக்கொள்வதைக் கிண்டல் செய்த சரவணன், “இவை அனைத்தும் திமுக ஆட்சி காலத்தில் போடப்பட்ட அடித்தளத்தின் பலன்கள். அதைத் தங்கள் சாதனையாகக் காட்டி ‘ஸ்டிக்கர்’ ஒட்டும் வேலைதான் நடக்கிறது. வெறும் ஒரு லட்சம் ரூபாய் மூலதனம் கொண்ட நிறுவனம் 10,000 கோடி முதலீடு செய்வதாகக் கூறுவது, இந்த அரசின் முதலீட்டு மாநாட்டின் ‘யோக்கியதையை’ வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது” என்று காட்டமாகக் குறிப்பிட்டார்.

பத்திரிகையாளர்களை ஏன் கண்டால் பயம்?
மாநாட்டில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டியவர், “கேள்வி கேட்டால் பொய் அம்பலமாகிவிடும், தாங்கள் கட்டமைக்கும் ‘ப்ரோபகண்டா’ பலூன் பஞ்சராகிவிடும் என்ற பயத்தில்தான் பத்திரிகையாளர்களை உள்ளே விடவில்லை. ஜனநாயகம் என்று பேசிக்கொண்டு, கேள்விகளைக் கண்டால் ஒளிந்து கொள்ளும் அரசு இது” என்றார்.
சட்டம்-ஒழுங்கு வீழ்ச்சி: அமைச்சர்களின் மழுப்பல்
மாணவர் அமுதன் மரணத்தை ‘கோஷ்டி மோதல்’ என அமைச்சர் திசைதிருப்புவதைக் கடுமையாகச் சாடிய சரவணன், “ஒருவரை 20 பேர் சேர்ந்து தாக்குவது எப்படி கோஷ்டி மோதலாகும்? பெற்றோர்கள் கதறி அழுது, போதைப்பொருள் விவகாரத்தைச் சுட்டிக்காட்டியும், அதைக் காதுகொடுத்துக் கேட்கக்கூட திராணியற்ற அமைச்சர்கள்தான் இன்று தமிழகத்தை ஆளுகிறார்கள்” என்று விமர்சித்தார். தமிழகம் முழுவதும் தொடரும் கொலைகளும், குற்றச் செயல்களும் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டதற்கான சான்றுகள் என்றார்.
’யு-டர்ன்’ அரசாங்கம்
சொத்து வரி உயர்வு, மின் கட்டணக் கொள்ளை என மக்கள் தலையில் சுமையை ஏற்றிவிட்டு, பின் மக்கள் போராட்டத்தைக் கண்டு பின்வாங்கும் அரசின் செயலை, “இது ஒரு முதுகெலும்பற்ற அரசு. தங்களுக்கு சாதகமாக இருந்தால் ஒரு கொள்கை, எதிர்த்தால் ‘யு-டர்ன்’ என மக்களை முட்டாளாக்கும் வேலைதான் நடக்கிறது” என்று ஆக்ரோஷமாகச் சாடினார். ”எதிர்க்கட்சிகளை முடக்குவதிலும், பொய் வழக்குகள் போடுவதிலும் காட்டும் முனைப்பை, சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதில் காட்டியிருந்தால் மக்கள் நிம்மதியாக இருந்திருப்பார்கள்” என்று கூறிய சரவணன், “மோடியின் பாணியில், நிதர்சனத்தை மறைத்து போலி பிம்பங்களை உருவாக்க நினைக்கும் இந்த அரசுக்குக் காலம் பதில் சொல்லும்” என்று எச்சரித்து முடித்தார்.
லார் கிப்பான் குரங்கு வழக்கு: ஈரோட்டில் வனத்துறை அதிகாரிகள் முன் உரிமையாளர் கேசவநாதன் ஆஜர்!
