புதுக்கோட்டை திலகர் திடல் அருகே சுதந்திர தின பேரணியின் போது பாஜக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே ஏற்பட்ட கடுமையான வார்த்தை மோதல் காரணமாக இரு தரப்பினரும் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.


முழக்கங்களால் உருவான மோதல்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் புதுக்கோட்டை பேராங்குளத்தில் இருந்து பேரணியாகப் புறப்பட்டு திலகர் திடலை அடைந்தனர். அங்கு அவர்கள் சுதந்திர தினம் குறித்து உரையாற்றிக் கொண்டிருந்த போது, அதே திலகர் திடலில் இருந்து பாஜகவினர் தங்களது சுதந்திர தின பேரணியைத் தொடங்கினர். அப்போது பாஜகசார்பில் ஒலிபெருக்கியில் பாடல்கள் ஒளிபரப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கம்யூனிஸ்ட் கட்சியினர் “பாசிசத்தை வேரறுப்போம்” என முழக்கங்களை எழுப்பினர். இதற்குப் பதிலடியாக பாஜகவினர் “இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒழிக” என எதிர் முழக்கங்களை எழுப்பியதால் திடீரென இரு தரப்பிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்தது.
திடீர் சாலை மறியல் & காவல்துறையினர் சமரசம்
வாக்குவாதம் முற்றியதை அடுத்து, இரு கட்சிகளையும் சேர்ந்த தொண்டர்கள் திலகர் திடலில் திடீரெனச் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுப் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையைச் சமரசத்திற்கு கொண்டு வந்தனர். இதன்பின்னர், காவல்துறையினரின் பாதுகாப்போடு பாஜகவினர் தங்களது சுதந்திர தின பேரணியைத் தொடர அனுமதிக்கப்பட்டனர். தற்போது கம்யூனிஸ்ட் கட்சியினர் திலகர் திடலில் தங்களது சுதந்திர தின நிகழ்ச்சிகளை அமைதியான முறையில் நடத்தி வருகின்றனர்.
