நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தித் திராவிடர் கழகம் சார்பில் நடத்தப்படவுள்ள இருசக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி அளிப்பது தொடர்பான விவரங்களை தாக்கல் செய்யச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவல்துறை தடைக்கு எதிராகத் திமுக வழக்கு
நீட் தேர்வுக்கு எதிராகவும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீட்டை (EWS) எதிர்த்தும் தமிழ்நாடு முழுவதும் இருசக்கர வாகனப் பிரச்சாரப் பயணம் நடத்தத் திராவிடர் கழகம் திட்டமிட்டது. இதற்குத் தமிழகக் காவல்துறை அனுமதி மறுத்ததை அடுத்து, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

“ஹெலிகாப்டரிலா போராட முடியும்?” – நீதிபதி சரமாரி கேள்வி இவ்வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்னிலையில் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது: “போராட்டம் நடத்துவது குடிமக்களின் அடிப்படை உரிமை.”
“வாகனப் பேரணிக்கான பெட்ரோல் செலவை அரசு வழங்கப் போவதில்லை; பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து காரணங்களைச் சுட்டிக்காட்டி அனுமதி மறுத்தால், மக்கள் ஹெலிகாப்டரிலா சென்று போராட முடியும்?”
“மாநில அரசு குடிமக்களின் அடிப்படை உரிமையை நசுக்கக் கூடாது” எனக் காவல்துறைக்கு நீதிபதி கேள்வி எழுப்பி விளக்கம் கேட்டிருந்தார்.
அரசுத் தரப்பு மற்றும் திராவிடர் கழக வாதங்கள்
வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்தியன் ஆஜராகி, “சட்டம் ஒழுங்கு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டே அனுமதி மறுக்கப்பட்டது. தமிழக அரசு நீட் போராட்டத்திற்கு எதிரானது அல்ல; சட்டமன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது” எனக் கூறி, புதிய மனு அளித்தால் பரிசீலிக்கத் தயார் எனத் தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், “வருகிற 22-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை பேரணி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மோட்டார் வாகன விதிகளைப் பின்பற்றி அனுமதிக்கப்பட்ட வேகத்திலேயே பேரணி செல்லும்; நாங்கள் பைக் ரேஸ் நடத்தப்போவதில்லை” என வாதாடினார்.
நாளை தாக்கல் செய்ய உத்தரவு
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பேரணியில் பங்கேற்கும் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை, பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை, பேரணி தொடங்கும் மற்றும் முடியும் இடங்கள் உள்ளிட்ட விவரங்களை நாளை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். அவ்விவரங்களைப் பதிவுசெய்து கொண்டு பேரணிக்கான உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
