குறுவைத் தொகுப்பு வழங்கத் தாமதம்: தவெக அரசைக் கடுமையாகச் சாடிய டிடிவி தினகரன்
குறுவை சாகுபடி காலம் முடிவடைந்து அறுவடை நிலைக்கு வந்துவிட்ட நிலையிலும், தமிழக அரசு அறிவித்த குறுவைத் தொகுப்பு உதவித்தொகை விவசாயிகளுக்கு இன்னும் போய் சேரவில்லை என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் புதிய கார்கள் வாங்குவதில் காட்டும் வேகத்தை, விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதில் அரசு காட்ட மறுப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறி:
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையைத் திறக்க இயலாத சூழல் ஏற்பட்டது. இதனையொட்டி, தமிழகம் முழுவதிலும் உள்ள டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்ட விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு 134 கோடி ரூபாய் மதிப்பில் குறுவைத் தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது.
ஆனால், அத்திட்டம் இன்று வரை விவசாயிகளைச் சென்றடையவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு மாதங்களாக நிலுவையில் உள்ள உதவி:
இயந்திரங்கள் மூலம் நடவு செய்ததற்கான ரசீதுகள் மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பித்து இரண்டு மாதங்கள் கடந்த பின்னரும் நிதி விடுவிக்கப்படவில்லை.
பயிர் அறுவடை செய்யும் தருவாயிலும் நிதியை வழங்காமல் காலம் தாழ்த்தும் அரசின் அலட்சியப்போக்கு, திட்டத்தின் நோக்கத்தையே சிதைப்பதாக அமைந்திருக்கிறது.
அரசுக்குக் கோரிக்கைகள்:
வாக்குறுதிகளை நிறைவேற்றுக: சாகுபடிச் செலவு உயர்வு, இடுபொருட்களின் விலை ஏற்றம் போன்ற நெருக்கடிகளில் சிாிக்கும் விவசாயிகளுக்குக் கொடுத்த முழுமையான வேளாண் கடன் தள்ளுபடி வாக்குறுதியை அரசு தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும்.
உடனடி நிதி உதவி:
குறுவைத் தொகுப்பு நிதியை எந்தவித தாமதமும் இன்றி உடனடியாகவும் முழுமையாகவும் விவசாயிகளின் கணக்கில் செலுத்த அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்கும் திட்டம்: அரசு மறுபரிசீலனை செய்ய சிபிஎம் வலியுறுத்தல்
