மாணவர்களின் ஜனநாயகப் போராட்ட உரிமைகளை அடக்கி ஒடுக்கும் வகையில் சுற்றறிக்கை அனுப்ப உத்தரவிட்ட தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அப்பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் என்றும், அவர் மீது அரசு உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி நாளை (ஆகஸ்ட் 22, 2026) தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ-எம்) அறிவித்துள்ளது. 
இது தொடர்பாக சி.பி.ஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள்:
சித்தாந்த சாய்மானமும் எதேச்சதிகாரப் போக்கும்இடதுசாரி மாணவர் அமைப்புகளை மட்டுமே பிரத்யேகமாகக் குறிவைத்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதன் மூலம், தலைமைச் செயலாளரின் சித்தாந்த சாய்மானம் வெட்டவெளிச்சமாகியுள்ளது.

அரசு நிர்வாக எந்திரத்தைத் தனது தனிப்பட்ட நோக்கங்களுக்காகத் தவறாகப் பயன்படுத்தும் எல்லைக்கு அவர் சென்றுள்ளார். நியாயமான நிர்வாகத்தை இனி அவரிடமிருந்து எதிர்பார்க்க முடியாது.
கல்லூரி கல்வி இயக்ககம் தனது சுற்றறிக்கையைத் திரும்பப் பெற்றிருந்தாலும், தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தின் முடிவும், அதன் தொடர்ச்சியாகச் சிறப்புச் செயலாளர் அனுப்பிய கடிதமும் இன்னும் நடைமுறையிலேயே உள்ளன. பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககங்கள் வாயிலாக அனுப்பப்பட்ட இந்தக் கடிதங்கள் இன்னும் திரும்பப் பெறப்படவில்லை. ’மிக முக்கியம்’ (Top Priority) எனக்கூறி நடவடிக்கை அறிக்கையைக் கோரியிருப்பது, திட்டமிட்டு நடத்தப்பட்ட எதேச்சதிகாரச் செயல்பாட்டையே காட்டுகிறது.
அமைச்சர்களின் விளக்கங்களுக்கு மறுப்பு
சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் அளித்த விளக்கங்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. மாணவர் போராட்டங்களை முடக்குவதுதான் கல்வி வளாக அமைதியா என்பதை அமைச்சர் விளக்க வேண்டும். சில வார்த்தைகள் தவறாக இடம்பெற்றுவிட்டன எனக் கூறுவதை ஏற்க முடியாது; சுற்றறிக்கையின் பின்னணியில் உள்ள நோக்கம் முழுவதும் ஜனநாயக விரோதமானது.
திண்டுக்கல் வட்டாட்சியர் விவகாரம்திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர், இடதுசாரி உறுப்பினர்களின் பட்டியலைச் சேகரிக்க உத்தரவிட்ட விவகாரத்தில், சட்டமன்றத்தில் வருவாய்த்துறை அமைச்சர் “நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” எனக் கூறினார். ஆனால், பயிற்சி முடிவடைந்ததால் அவர் வேறு பணிக்கு விடுவிக்கப்பட்டதாகவே ஆட்சியரின் குறிப்பு கூறுகிறது. பணி விடுவிப்புக்கு பெயர் நடவடிக்கையா எனக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
கட்சியின் கோரிக்கைகள்:
இடதுசாரி இயக்கங்கள் மற்றும் மாணவர்கள் மீதான இந்த நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வரும் அரசும் உடனடியாகத் தங்கள் நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும்.தலைமைச் செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது முறையான துறைரீதியான நடவடிக்கை பாய வேண்டும்.இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (22.08.2026) தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் சி.பி.ஐ(எம்) சார்பில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. பொதுமக்களும் ஜனநாயகச் சக்திகளும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
