இந்தியாவில் மின்சார வாகனங்களின் (EV) பயன்பாட்டைப் பரவலாக்கவும், சார்ஜிங் வசதிகளை எளிமையாக்கவும் பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய், ‘ஜியோ-பிபி’ (Jio-bp) நிறுவனத்துடன் புதிய கூட்டணியை அமைத்துள்ளது.
இந்தியாவில் மின்சாரக் கார்களின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், போதிய சார்ஜிங் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததே வாடிக்கையாளர்களின் பிரதான சவாலாக இருந்து வருகிறது. இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில், ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.

7,000-க்கும் அதிகமான சார்ஜிங் பாயிண்டுகள் இணைப்பு
இந்த ஒப்பந்தத்தின் மூலம், நாட்டின் 300-க்கும் மேற்பட்ட நகரங்களில் பரவியுள்ள 7,000-க்கும் அதிகமான ‘ஜியோ-பிபி பல்ஸ்’ (Jio-bp pulse) சார்ஜிங் பாயிண்டுகள் இனி ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சார்ஜிங் நெட்வொர்க்குடன் இணைக்கப்படுகின்றன. இதன் மூலம் ஹூண்டாய் மின்சார வாகனங்களை வைத்திருப்பவர்கள், ஜியோ-பிபி சார்ஜிங் மையங்களை மிகவும் சுலபமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
‘MYHYUNDAI’ செயலி மூலம் எளிதான சேவை
மேலும், ஹூண்டாய் வாடிக்கையாளர்கள் தங்களது பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ள ‘மைஹூண்டாய்’ (MYHYUNDAI) செயலி (App) மூலமாகவே நாடு முழுவதும் உள்ள 37,000-க்கும் மேற்பட்ட இவி சார்ஜிங் பாயிண்டுகளின் இருப்பிடத்தை எளிதாகக் கண்டறிந்து முன்பதிவு செய்ய முடியும். இந்தக் கூட்டணியின் மூலம் மின்சார வாகனங்களுக்குச் சார்ஜ் செய்வது முன்பை விட மிக எளிதாகும் என்பதால், அதிக எண்ணிக்கையிலான மக்கள் டீசல் மற்றும் பெட்ரோல் கார்களில் இருந்து இவி (EV) கார்களுக்கு மாறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
