செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியால் பல்வேறு நன்மைகள் விளைந்தபோதிலும், அதன் தவறான பயன்பாடுகள் உலக நாடுகளுக்குப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், தங்களது AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபத்தான உயிரியல் ஆயுதங்களை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட அதிர்ச்சி தரும் ஆராய்ச்சிகளைத் தடுத்து நிறுத்தியுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ‘ஆந்த்ரோபிக்’ (Anthropic) AI நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
‘க்ளாட் AI’ (Claude AI) மூலம் நச்சு ஆராய்ச்சி: ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் முன்னணி AI மாடலான ‘க்ளாட்’ (Claude AI)-ஐப் பயன்படுத்தி, சில விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மனித குலத்திற்கு ஆபத்தான உயிரியல் ஆராய்ச்சிகளில் ஈடுபட முயன்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சிக்குன்குனியா வைரஸின் வீரியத்தையும் பரவும் திறனையும் பல மடங்கு அதிகரிக்கும் ‘கெயின்-ஆஃப்-ஃபங்க்ஷன்’ (Gain-of-function) போன்ற ஆபத்தான சோதனைகளுக்கு AI மாடல்களை வழிகாட்டியாகப் பயன்படுத்த முயன்றுள்ளனர்.

கணக்குகள் உடனடி முடக்கம் – ஆந்த்ரோபிக் அதிரடி
இந்தச் சட்டவிரோத மற்றும் பேராபத்தான ஆராய்ச்சிகளைத் தங்களது கண்காணிப்பு அமைப்புகள் மூலம் முன்கூட்டியே கண்டறிந்ததாக ஆந்த்ரோபிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. பேரழிவு ஏற்படுத்தக்கூடிய உயிரியல் ஆயுதங்கள் மற்றும் புதிய வைரஸ்களை உருவாக்க முயன்ற சந்தேகத்திற்குரிய நபர்களின் பயனர் கணக்குகளை (Accounts) உடனடியாக முடக்கி, அந்த ஆராய்ச்சிகளை அரைகுறையிலேயே தடுத்து நிறுத்தியதாகத் தெரிவித்துள்ளது.
AI பாதுகாப்பு குறித்த சர்வதேசக் கவலை
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் தவறான கைகளில் கிடைத்தால் அது சர்வதேசப் பாதுகாப்பிற்கே பேரபாயமாக முடியும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. எதிர்காலத்தில் உயிரியல், வேதியியல் ஆயுதங்கள் உருவாக்க ஏஐ தளங்கள் பயன்படாதவாறு கூடுதல் பாதுகாப்பு வளையங்களை (Safety Guardrails) பலப்படுத்தி வருவதாகவும் ஆந்த்ரோபிக் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
ஒடிசாவில் மீட்கப்பட்ட 5 ஒராங்குட்டான் குட்டிகள்: இந்தியாவுக்கு இந்தோனேசியா அரசு அவசரக் கடிதம்!
