தமிழ் பட்டிமன்ற உலகைக் தன்னுடை தனித்துவமிக்கக் குரலாலும் நகைச்சுவை உணர்வாலும் பல தசாப்தங்களாகக் கட்டிப் போட்ட மாபெரும் தமிழறிஞரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான சாலமன் பாப்பையா (90), வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மதுரையில் இன்று காலமானார். அவரது மறைவு உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் மத்தியிலும் தமிழ் இலக்கிய உலகிலும் ஆழமான சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
“அன்பு தாய்மார்களே…” – கணீர்க் குரல் இனி இல்லை
“அன்பு தாய்மார்களே, அருமை பெரியோர்களே, இனிய குழந்தைகளே…” என்று பட்டிமன்ற மேடைகளில் ஒலிக்கும் அவரது கம்பீரமான, கனிவான கணீர்க் குரல் இனி கேட்காது என்ற எண்ணமே தமிழ் ரசிகர்களை உரைய வைத்துள்ளது. 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை உலகளவில் தலைமை தாங்கி நடத்தி சாதனை படைத்தவர் சாலமன் பாப்பையா.

மன்னர்கள் கதைகளையும், புராணங்களையும் மட்டுமே பேசிக்கொண்டிருந்த பட்டிமன்ற மேடைகளை, எளிய சராசரி மனிதர்களின் அன்றாட வாழ்க்கையையும் குடும்ப உறவுகளையும் பேசும் மேடைகளாக மாற்றிய பெருமை இவரையே சேரும்.
கடைசி பட்டிமன்றம் & இறுதி நிமிடங்கள்
கடந்த 2 நாட்களாகக் காய்ச்சல் காரணமாகத் தனது மதுரை இல்லத்தில் ஓய்வெடுத்து வந்த நிலையில், இன்று காலை வயது மூப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்தது. மறைவதற்குச் சில நாட்களுக்கு முன்புதான், கடந்த 5-ஆம் தேதி சிவகாசியில் நடைபெற்ற சன் டிவி சிறப்புப் பட்டிமன்றத்தில் கலந்துகொண்டு வழக்கம் போல் கலகலப்பாக நடுவர் பொறுப்பேற்று நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பத்மஸ்ரீ முதல் திருக்குறள் உரை வரை
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், சங்க இலக்கியங்களை எளிய தமிழில் மக்களிடம் கொண்டு சேர்த்தவர். திருக்குறளுக்கு இவர் எழுதிய உரை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ் மொழிக்கும் இலக்கியத்திற்கும் அவர் ஆற்றிய ஈடற்ற தொண்டைப் போற்றும் வகையில், கடந்த 2021-ஆம் ஆண்டு ஒன்றிய அரசு அவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருதை வழங்கி கௌரவித்தது.
“பட்டிமன்றத் துறையின் மாபெரும் திருப்புமுனை” – கண்ணீர் அஞ்சலி
சாலமன் பாப்பையாவின் மறைவுச் செய்தி அறிந்தவுடன் அரசியல் தலைவர்கள், தமிழறிஞர்கள் மற்றும் கலைத்துறையினர் நேரில் வந்தும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் ஐ.லியோனி: “பட்டிமன்றத் துறையில் மாபெரும் திருப்புமுனையையும் மறுமலர்ச்சியையும் உருவாக்கியவர் சாலமன் பாப்பையா அண்ணன். அவரது இழப்பு தமிழ் மேடைகளுக்குப் ஈடுசெய்ய முடியாத இழப்பு” எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.
பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர்: “தனது தந்தையைப் போன்ற வழிகாட்டி” என நினைவுகூர்ந்து கண்ணீர் மல்கத் தனது ஆழ்ந்த இரங்கலைப் பதிவிட்டுள்ளார்.
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக மதுரையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களும் ஆயிரக்கணக்கானப் ரசிகர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
“கட்டணக் கொள்ளையை ஆதரிக்கிறதா தவெக அரசு?”.. ஆம்னி பேருந்துகள் விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் சாடல்!
