காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூருக்கு அருகில் உள்ள மதுரமங்கலம் கிராமத்தில் செமிகண்டக்டர் பூங்கா மற்றும் சிப்காட் வளாகம் அமைக்க 410 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்: விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிக்கும் முயற்சி காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், மதுரமங்கலம் கிராமத்தில் 410.80 ஏக்கர் புன்செய் விளைநிலங்கள் மற்றும் 11.55 ஏக்கர் புறம்போக்கு நிலங்கள் என மொத்தம் 423.35 ஏக்கர் நிலங்களை புதிய சிப்காட் வளாகம் அமைப்பதற்காக கையகப்படுத்த அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

விளைநிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்பதற்காக பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிட்ட தவெக அரசு, தற்போது அதன் அருகிலேயே அமைந்துள்ள மதுரமங்கலத்தில் நிலங்களை கையகப்படுத்தி நூற்றுக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறிப்பது அநீதியானதும், கண்டிக்கத்தக்கதும் ஆகும்.
ரூ.175 கோடியில் செமிகண்டக்டர் பூங்காசமீபத்தில் சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ், மதுரமங்கலத்தில் ₹175 கோடியில் செமிகண்டக்டர் பூங்கா அமைக்கப்பட்டு ₹2,000 கோடி முதலீடுகள் ஈர்க்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்தார்.
இதற்காக மதுரமங்கலம் கிராமத்தின் ‘ஆ’ பிரிவில் 35.20 ஏக்கர் நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ள நிலையில், சிறப்பு நில எடுப்பு அலுவலர்கள் மூலம் முந்தைய திமுக அரசு நிர்ணயித்த குறைந்த விலைக்கு நிலங்களை தருமாறு விவசாயிகள் கட்டாயப்படுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பரந்தூருக்கு ஒரு நீதி; மதுரமங்கலத்திற்கு ஒரு நீதியா? மதுரமங்கலம் கிராமமானது பரந்தூர் விமான நிலையத்திற்கு மிக அருகில் (10 கி.மீ), முதல்வர் நேரில் சென்ற ஏகனாபுரத்திலிருந்து 5 கி.மீ தொலைவிலேயே அமைந்திருக்கிறது.
அன்புமணி கேள்வி: “5,000 ஏக்கருக்கும் அதிகமான நிலம் தேவைப்பட்ட பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற முடிந்த அரசால், வெறும் 35 ஏக்கர் தேவைப்படும் செமிகண்டக்டர் பூங்காவையும், 423 ஏக்கர் சிப்காட் திட்டத்தையும் வேறு இடத்திற்கு மாற்ற முடியாதா?”மாற்று இடங்களில் அமைக்க கோரிக்கைகையகப்படுத்தப்படவுள்ள நிலங்களில் மா, தென்னை, தேக்கு மரங்கள் நிறைந்துள்ளன.
விவசாயிகளும் வேளாண் கூலித் தொழிலாளர்களும் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படுவர். “விவசாயிகள் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்பதே பாமகவின் உறுதியான நிலைப்பாடு.
எனவே, மதுரமங்கலத்தில் 410 ஏக்கர் வேளாண் நிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தைக் கைவிட்டு, ஏற்கெனவே அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களிலோ அல்லது அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களிலோ செமிகண்டக்டர் பூங்காவை அமைக்க வேண்டும்.”
