திருவாரூர் மாவட்டம் கமலாபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையில், காலி மது பாட்டிலை திரும்ப ஒப்படைத்தபோது ரூ.10-க்கு பதிலாக ரூ.5 மட்டுமே வழங்கப்பட்டதாக மது பிரியர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


கமலாபுரம் அரசு மதுபானக் கடையில் மது வாங்கிய ஒருவர், மது அருந்திய பின்னர் காலி மது பாட்டிலை மீண்டும் கடையில் ஒப்படைக்க சென்றுள்ளார். அப்போது அவருக்கு ரூ.10 வழங்குவதற்கு பதிலாக ரூ.5 மட்டுமே வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியடைந்த அவர், ஏன் ரூ.5 மட்டும் கொடுக்கிறீர்கள் என்றும், ரூ.10 வழங்க வேண்டுமே என்றும் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், அருகில் மது வாங்க வந்தவர்களிடமும் காலி பாட்டிலை திரும்ப கொடுத்தபோது எவ்வளவு பணம் வழங்கப்பட்டது என அவர் கேட்டுள்ளார். அதற்கு அவர்களும் ரூ.5 மட்டுமே வழங்கப்படுவதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான காட்சிகளை அந்த நபர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காலி மது பாட்டிலுக்கு ரூ.10 வழங்கப்படும் என கூறப்பட்ட நிலையில், ரூ.5 மட்டுமே வழங்கப்படுவதாக எழுந்துள்ள இந்த குற்றச்சாட்டு மது பிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இதுதான் ஆட்சியில் கொண்டு வரப்படும் மாற்றமா எனவும் அந்த வீடியோவை பகிர்ந்து பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
