வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


இதன் ஒரு பகுதியாக, மாவட்ட தீயணைப்பு அலுவலர் லோகநாதன், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தீயணைப்பு வீரர்களுக்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அவசர காலங்களில் விரைந்து செயல்படுவது குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர் திருவள்ளூர் தீயணைப்பு நிலையத்தில், பருவமழை காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பாக மீட்பதற்காக பயன்படுத்தப்படும் பல்வேறு மீட்பு உபகரணங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக, மரம் அறுக்கும் இயந்திரங்கள், படகுகள், கயிறுகள், மிதவை உடைகள், அவசரகால விளக்குகள் மற்றும் மின் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர்கள் ஆகியவை சரியான நிலையில் உள்ளனவா என்பது பரிசோதிக்கப்பட்டது.
மேலும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கான வாகனங்கள் எந்த நேரத்திலும் அவசர அழைப்பு வந்தவுடன் உடனடியாக புறப்படும் வகையில் தயார் நிலையில் உள்ளனவா என்பதையும் அதிகாரிகள் உறுதி செய்தனர்.
அவசர அழைப்புகளுக்கு துரித நடவடிக்கை
பருவமழை காலங்களில் வெள்ளம், மரங்கள் சாய்வது உள்ளிட்ட பல்வேறு அவசர நிலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்களிடமிருந்து வரும் அவசர அழைப்புகளுக்கு தீயணைப்பு வீரர்கள் தாமதமின்றி செயல்பட வேண்டும் என மாவட்ட தீயணைப்பு அலுவலர் லோகநாதன் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் செல்வராஜ், சிறப்பு நிலைய அலுவலர் தனசேகரன் மற்றும் தீயணைப்பு குழுவினர் உடனிருந்தனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே மீட்பு உபகரணங்கள் மற்றும் வாகனங்களை தயார் நிலையில் வைத்திருப்பதன் மூலம், மழைக்கால அவசரநிலைகளில் பொதுமக்களுக்கு விரைவான உதவிகளை வழங்க முடியும் என தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
