’மாமன்னன்’ படத்தை ’தேவர் மகன்’ படத்தோடு ஒப்பிடுவதா?- கடம்பூர் ராஜூ
ஜாதி மோதல்களை ஊக்குவிப்பவர்கள் யாராக இருந்தாலும் கண்டிக்கதக்கது என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
இயக்குனர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன், தற்போது மாமன்னன் போன்ற குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த படங்களை எடுத்து வருகிறார். கடைசியாக இவர் எடுத்த கர்ணன் படத்தில் கொடிக்குளம் கிராமத்தில் நடைபெற்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இருந்தது. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி வெளியாக உள்ள படம் மாமன்னன் இப்படம் ஜூலை 29ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இதற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

இப்படம் குறித்து பல்வேறு சர்ச்சை கருத்துகள் வெளிவரும் நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, “தேவர் மகன் திரைப்படம் வெளியான போது பல்வேறு விமர்சனங்கள் வந்தாலும் மக்களிடம் பெறும் வரவேற்பை பெற்றது. மாமன்னன் திரைப்படத்தில் ஜாதி மோதலை உருவாக்கும் கருத்துக்கள் இருந்தால் படக்குழு அதனை நீக்க வேண்டும். அதற்காக மாமன்னன் படத்தை தேவர் மகன் படத்தோடு ஒப்பிட்டு பேசக்கூடாது. ஜாதி மோதல்களை ஊக்குவிப்பவர்கள் யாராக இருந்தாலும் கண்டிக்கதக்கது” என்றார்.