அனைத்து கோயில்களையும் மூடிவிடலாம்- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
கோயில் திருவிழாக்களில் வன்முறைகள் வெடித்தால் கோயில்கள் இருப்பது அர்த்தமற்றதாகி விடுகிறது கோயில்களை மூடிவிடலாம் என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் உள்ள ருத்ர மகா காளியம்மன் ஆலயத்தின் ஆடித் திருவிழா ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 1ம் தேதி வரை நடைபெற உள்ளதால் விழாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி கோவில் பரம்பரை அறங்காவலர் தங்கராசு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, காவல் துறை தரப்பில், கோயில் திருவிழா நடத்துவதில் இரு பிரிவினருக்கு இடையில் பிரச்னை உள்ளதாகவும், தாசில்தாரர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி, கோயில் திருவிழாக்கள் நடத்துவதில் இரு பிரிவினருக்கு இடையில் பிரச்னை ஏற்படுவது தொடர்பாக வழக்குகள் தினந்தோறும் விசாரணைக்கு வருவதாக அதிருப்தி தெரிவித்தார். அமைதி, மகிழ்ச்சிக்காக மக்கள் கோயிலுக்கு செல்வதாகவும், ஆனால் திருவிழாக்களில் வன்முறை வெடிப்பது துரதிருஷ்டவசமானது என வேதனை தெரிவித்த நீதிபதி, கோயில் திருவிழாக்கள், யார் பலம் வாய்ந்தவர்கள் என நிரூபிக்கவே நடத்தப்படுவதாகவும், உண்மையான பக்தி இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
கோயில் திருவிழாக்களில் வன்முறைகள் வெடித்தால் கோயில்கள் இருப்பது அர்த்தமற்றதாகி விடுகிறது கோயில்களை மூடிவிடலாம் எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற பிரச்னைகளுக்காக காவல் துறையினர், வருவாய் துறையினரின் நேரம் வீணடிக்கப்படுவதாக குறிப்பிட்ட நீதிபதி, ருத்ர மகா காளியம்மன் ஆலயத் திருவிழாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி உத்தரவிட முடியாது என மறுத்துவிட்டார்.
திருவிழாவை அமைதியாக நடத்த வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் வசம் விட்டு விடுவதாகவும், ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக தலையிட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், கோயில் திருவிழாவையும் நிறுத்த வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.