பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு சேர்த்து வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கு ஜனவரி 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம். கடலூரை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் என்பவர் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு சேர்த்து வழங்க உத்தரவிடக் கோரி தொடர்ந்த வழக்கை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.


தமிழகத்தில் கடந்த பொங்கல் பண்டிகையின்போது, நியாயவிலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக பச்சரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இந்நிலையில், வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரூபாயும் தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மட்டும் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அந்த பொருட்கள் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து விநியோகம் செய்யப்படும் எனவும் பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறாததற்கு விவசாயிகள் உட்பட பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பையும் சேர்த்து வழங்க வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், பொங்கல் பரிசுத்தொகுப்புடன் கரும்பையும் சேர்த்து வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, கடலூர் மாவட்டம் மதனகோபாலபுரத்தை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
உயர் நீதிமன்ற விடுமுறை காலஅமர்வில் இந்த மனு டிசம்பர் 28 ஆம் தேதி இன்று விசாரணைக்கு வந்தது. பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு சேர்த்து வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஜனவரி 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.


