தமிழ்நாட்டைச் சார்ந்த விளையாட்டு வீரர் ஆகாஷ் நேபாளத்தில் மரணமடைந்தார். அவரின் உடல் சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்டு அமைச்சர் கே.எஸ்.செஞ்சி மஸ்தான், திருவள்ளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள். வாலிபால் கோப்ப்பைகளுடன் உறவினர் உடலை கொண்டு சென்றனர்.
திருவள்ளூர் அடுத்த, கைவண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நேருதாசன் இவர் மகன் ஆகாஷ் (27) வாலிபால் விளையாட்டு வீரர். கடந்த 21 ஆம் தேதி அன்று, நேபாளத்தில் ரங்கசாலா விளையாட்டு மைதானத்தில் நடந்த வாலிபால் போட்டியில் கலந்து கொள்ள சென்றிருந்தார்.
25 ஆம் தேதி 11:00 மணிக்கு, முதல் சுற்றில் விளையாடிய பின்னர் ஓய்வு எடுக்க அறைக்கு சென்றார். அங்கு வாந்தி எடுத்ததோடு நெஞ்சுவலியும் ஏற்பட்டுள்ளது. உடனடியாக சக விளையாட்டு வீரர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், ஆகாஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.
அதனைத் தொடர்ந்து உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டு நேபாளத்தில் இருந்தது டெல்லி விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. டெல்லியில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா விமானம் மூலம் உடல் கொண்டுவரப்பட்டது.
விமான நிலையத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் மற்றும் திருவள்ளுர் திமுக சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் ஆகியோர் அதிகாரிகளுடன் வந்து முறையாக மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்கள்.
அப்போது அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழகத்தைச் சார்ந்த வாலிபால் விளையாட்டு வீரரான ஆகாஷ் நேபாளத்திற்கு விளையாட சென்ற பொழுது உயிரிழந்ததை அறிந்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் உடற்கூறாய்வு முடிந்து அவரது உடலை இன்று சென்னை கொண்டுவரப்பட்டு அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
விளையாட்டு வீரரின் உயிரிழப்பு குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று அவரின் குடும்பத்தினருக்கு உதவிகள் எதுவும் தேவை இருப்பின் பெற்று தர முயற்சிகள் மேற்கொள்வேன் எனவும் தெரிவித்தார்.
அப்போது அங்கு வந்த உறவினர்கள், நண்பர்கள் வாலிபால் விளையாட்டு வீரர் சவ பெட்டி மீது வாலிபால், அவர் பங்கேற்று வென்ற பரிசு கோப்பைகளை வைத்தவாறு உடலை சொந்தவூர் கொண்டு சென்றது மனதை உறுக்கும்விதமாக அமைந்தது.