அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழா (ஜனவரி 22) இன்று மிகப்பிரமாண்டமாக நடைபெறுகிறது. அயோத்தியில் ராமரின் கண்களில் மூடப்பட்டுள்ள துணியை அகற்றும் விழா இன்று பிற்பகல் நடைபெற இருக்கிறது.
மேலும் இவ்விழாவில் கலந்து கொள்ள 7000 சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அதன்படி நடிகர் ரஜினி, ரன்பீர் கபூர், ரிஷப் செட்டி, ஜாக்கி ஷெராப், தனுஷ் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

தற்போது கோலாகலமாக தொடங்கப்பட்டுள்ள இந்த விழா இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் நடைபெற இருக்கிறது. இவ்விழாவில் கலந்து கொள்ள லட்சக்கணக்கானோர் அயோத்தியில் குவிந்து வருகின்றனர். ஏராளமான திரை பிரபலங்களும் கலந்து கொள்ள வந்து கொண்டிருக்கின்றனர். இவ்விழாவில் பங்கேற்கும் திரை பிரபலங்கள் , இந்நிகழ்வை காண பாக்கியம் செய்திருப்பதாகவும், இந்நிகழ்வை காண தங்களுக்கு கௌரவமாக இருப்பதாகவும் கூறி பெருமைப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் ரஜினி, அமிதாபச்சன், அபிஷேக் பச்சன், ஜாக்கி ஷெராப், கங்கனா ரனாவத் சிரஞ்சீவி, ராம்சரண் உள்ளிட்டோர் அயோத்தி கோயிலின் பிரம்மாண்ட பிரதிஷ்டை விழாவில் கலந்து கொள்ள வருகை தந்துள்ளனர்.
இந்த கும்பாபிஷேக விழாவில், தொழிலதிபர் முகேஷ் அம்பானி கிரிக்கெட் பிரபலங்கள் சச்சின் மற்றும் விராத் கோலி உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர். மேலும் பாலிவுட் பிரபலங்கள் ரன்பீர் கபூர், ஆலியா பட், கத்ரீனா கைஃப் போன்றோரும் வருகை தந்துள்ளனர்.