
சிவகாசி அருகே பட்டாசு தொழிற்சாலையில் நடந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து நிவாரண உதவி வழங்கினார்.

இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், சிவகாசி அருகே செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக நேற்று நிகழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியையும் வேதனையையும் தந்தது. இந்த கோர விபத்தால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆறுதலை தெரிவித்ததுடன், அவர்களுக்கு துணை நிற்கும் விதமாக தலா ரூ.3 லட்சம் நிவாரண உதவியும், காயமடைந்து சிகிச்சை பெறுவோருக்கு ரூ.1 லட்சமும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த நிவாரண உதவிக்கான காசோலைகளை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வழங்கி ஆறுதல் கூறினோம். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தொடர் சிகிச்சையும் வேண்டிய அனைத்து உதவிகளையும் உறுதி செய்ய அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நமது கழக அரசு என்றும் உறுதுணையாக இருக்கும். எனக் குறிப்பிட்டுள்ளார்
