இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 445 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 131 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 112 ரன்களும் எடுத்தனர். இதனை தொடந்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் ஆடியது. அந்த அணி 319 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனை தொடர்ந்து 126 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷ்வி ஜெய்ஷ்வால் 214 ரன்கள் குவித்தார். இந்திய அணி 430 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இதன் காரணமாக இங்கிலாந்து அணிக்கு 556 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில், இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இறுதியாக இங்கிலாந்து அணி 122 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.